சென்னை, மார்ச் 7- மின் வாரியத்தில் பணியாற்றும் பகுதிநேர பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கக்கோரி தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பல ஆண்டுகளாக பகுதிநேர பணியாளர்கள் அலுவலகத்தில் துப்புறவு பணியையும், குடிநீர் வழங்கும் பணியையும் சொற்ப ஊதியத்தில் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களை நிரந்தரப்படுத்தி சத்துணவு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்கக் கோரி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு உச்சநீதிமன்றம் வரை சென்று தீர்ப்பை பெற்றது. அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து, சங்கத்தின் கோரிக்கையின் அடிப்படையில் மீண்டும் நிரந்தரப்படுத்தி சத்துணவு ஊழியர்க ளுக்கு இணையான ஊதியத்தை வழங்கியது. இதில் பல்வேறு காரணங்களால் பலர் விடுபட்டிருந்தனர். விடுபட்டவர்களின் விவரங்களை வட்ட அலுவலகத்திலிருந்து வாரிய உத்தரவுகளின் படி பெறப்பட்டு தலைமைப் பொறியாளர் பணியமைப்பு அலுவலகத்தில் பல மாதங்களாக நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. இந்த கோரிக்கைகள் குறித்து முதல்வரிடமும், மின்துறை அமைச்சரிடமும் கடந்த 29.6.2021 அன்று கடிதம் அளித்து நடவடிக்கை எடுக்குமாறு மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தி இருந்தது. இதையடுத்து மின்வாரியத் தலைவரிடம் கடந்த 19.8.2021 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஆயிரம் பேர் விடுபட்டது குறித்தும் ,இன்னும் பல பணியாளர்களை அடையாளம் காண வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.
ஆனால் இதுவரை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உடனடியாக இந்த கோரிக்கைகளை அரசும், வாரியமும் உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமையம் அருகே திங்களன்று (மார்ச் 7) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் தி.ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். மாநிலப் பொருளாளர் எம்.வெங்கடேசன், மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் கே.ரவிச்சந்திரன், கே.அருட்செல்வன், கே.பழநிவேலு, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் கன்வீனர் எம்.தனலட்சுமி, மாநில நிர்வாகிகள் ஆர்.ரவிக்குமார், ஏ.முருகானந்தன், எம்.தயாளன், எஸ்.அகஸ்டின், எஸ்.ராஜாராமன், தி.அறிவழகன், எஸ்.ஜோதி, கே.விஜயலட்சுமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் வாழ்த்திப் பேசினார். மாநில பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினார். இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து 700க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், 3 ஆண்டுகளுக்கு முன்பு பட்டியல் பெறப்பட்டு நிலுவையில் உள்ள பகுதிநேர பணியாளருக்கு பணி நியமன உத்தரவு வழங்க வேண்டும், பகுதி நேரமாக பணியாற்றி வரும் பணியாளர்களை முழுநேர பணியாளர்களாக மாற்ற வேண்டும், தகுதியுள்ள பகுதிநேர பணியாளர்களுக்கு உள்முக தேர்வின் மூலம் பதவி மாற்றம் வழங்க வேண்டும் என்றும் தலைவர்கள் வலியுறுத்தினர்.