tamilnadu

நெல் பயிருக்கான காப்பீட்டுத்தொகை வழங்குவதில் பாரபட்சம்

நெல் பயிருக்கான காப்பீட்டுத்தொகை வழங்குவதில் பாரபட்சம்

குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு

அரியலூர், மே 31-  அரியலூர் மாவட்டத்தில், நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டுத்தொகை வழங்குவதில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது என குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டினர். அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் ராஜேந்திரன், செங்கமுத்து, தங்க.தர்மராஜன், பாலசிங்கம், விஸ்வநாதன் உட்பட பலரும் பங்கேற்று பேசினர்.  அப்போது, அரியலூர் மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பா நெல் சாகுபடியில் விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். அதற்கான காப்பீட்டுத் தொகை அண்மையில் வழங்கப்பட்டுள்ளது. அதில், பாரபட்சமாக ஒவ்வொரு விவசாயிக்கும் வேறுவேறு தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகள் காப்பீட்டுத் தொகை செலுத்தும்போது ஒரே தவணையில் செலுத்தும் நிலையில், அரசு விடுவிக்கும்போது தவணை முறையில் வழங்குவது கூடாது. கரும்பு விவசாயிகளுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் கடன் வழங்குவதில்லை. மாவட்டத்தில் தாழ்வாக உள்ள அனைத்து மின்கம்பிகளையும் சீரமைக்க வேண்டும். சேதமடைந்துள்ள மின்கம்பங்களை மாற்ற வேண்டும். உரம் விற்பனை கடைகளில் அதன் விலைகளை விவசாயிகள் அறியும் வகையில் எழுதி வைக்க வேண்டும்.  கோட்டைக்காடு வெள்ளாற்று பாலத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். வண்டல் மண் எடுக்க அனுமதிக்கும் ஏரிகளை முழுமையாக அளவீடு செய்ய வேண்டும் என்றனர்.