வெம்பக்கோட்டை, மே 16- வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணாலான, சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கலை நயம் மிக்க கண்கவர் குவளை கண்டறியப்பட்டுள்ளது. வெம்பக்கோட்டை அருகே வைப்பற்றின் வடகரையில் அமைந்துள்ள உச்சிமேட்டில் 25 ஏக்கர் பரப்பளவில் கடந்த மார்ச் 16ம் தேதி முதல் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. முன்னதாக, அகழாய்வில் சுடுமண்ணால் ஆன பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள், முத்து மணிகள், சங்கு வளையல்கள், சுடு மண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட்கள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சுடு மண் அகல்விளக்கு, யானை தந்தால் செய்யப்பட்ட அணிகலன், சுடுமண்ணால் ஆன தொங்கட்டான் ஆகிய பொருட்கள் கண்டறியப்பட்டன. இந்நிலையில், திங்களன்று நடைபெற்ற அகழாய்வில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் பயன்படுத்தப்பட்ட, கலை நயம் மிக்க கண்கவர் குவளை கண்டறியப்பட்டுள்ளது, இந்தக் குவலையானது, அழகிய வேலைப்பாடுகளுடன் கூடியதாக உள்ளது எனவும், இந்தக் குவளை எதற்காக பயன்படுத்தப்பட்டது என்பது குறித்தும் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதன் மூலம், தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, கலை நயமிக்கப் பொருட்களை தயார் செய்யவும், அதைப் பயன்படுத்தியும் வந்துள்ளனர் எனத் தெரிய வருகிறது.