இயக்குநர் மாரி செல்வராஜ் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் தனது சொந்த ஊரில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தனது எக்ஸ் தளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். உதவி தேவைப்படுபவர்கள் குறித்த விவரங்களையும் பகிர்ந்து வந்தார். அதோடு நில்லாமல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்றும் களப்பணியில் ஈடுபட்டார்.
இதனிடையே மழை, வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெல்லை சென்ற நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜும் அவருடன் இணைந்து சென்றார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. அமைச்சர் உடனான களஆய்வில் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு என்ன வேலை என்பதான விமர்சனங்களை சிலர் எழுப்பினர். இந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ள மாரி செல்வராஜ், “என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பதற்காக அல்ல... அது நீங்கள் யாரென்று உங்களுக்கு நிரூபிப்பது!” என்று பதிலடி தந்து பதிவிட்டுள்ளார்.