tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பேருந்து - வேன் மோதிய விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தஞ்சாவூர், மே 25-  தஞ்சாவூர் அருகே, செங்கிப்பட்டி பகுதியில் அரசுப் பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. கர்நாடக மாநிலம், பெங்களூருவி லிருந்து வேளாங்கண்ணிக்கு 12 பேர் வேனில் மே 21 ஆம் தேதி சென்று கொண்டிருந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி பகுதியில் வந்த அந்த வேனும், தஞ்சாவூரிலிருந்து திருச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் பெங்களூரு ரிச்மண்ட் டவுனை சேர்ந்த சாண்டியா கோ ஜான் போஸ்கோ(57), அவரது மனைவி ஜாக்குலின் ஆப்ரகாம் ஜான்(50), பெங்களூரு சாந்தி நகரைச் சேர்ந்த சார்லஸ் மனைவி நளினி(49), வேன் ஓட்டுநரான பெங்களூரு லாகிரி முதன்மைச் சாலையைச் சேர்ந்த கே. ஜெகதீசா(45) ஆகியோர் நிகழ்விடத்திலும், பெங்களூரு ரிச்மண்ட் டவுனை சேர்ந்த பி. ஆரோக்கியதாஸ் (44), டி. சார்லஸ்(49) மே 22 ஆம் தேதி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ஆரோக்கியதாஸ் மகள் தாஷி (7) சனிக்கிழமை உயிரிழந்தார்.  இதனால், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. மேலும், 5 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வடிகால் வாய்க்காலை தூர்வார  விவசாயிகள் கோரிக்கை

பாபநாசம், மே 25-   தஞ்சாவூர் - நாகை சாலையின் தென்புறம் உள்ள வடிகால் வாய்க்காலை தூர் வார விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  அம்மாபேட்டையில் இருந்து பல்லவராயன் பேட்டை வரையான 5 கிலோ மீட்டர் தூரமுள்ள வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படாமல் உள்ளது. இந்த வடிகால் வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர் வாரப்படாததால் நாணல்கள் மண்டியுள்ளன. இதனால் மழைக் காலங்களில் மழை நீர் வடிய இடமின்றி,  நூற்றுக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. பருவ மழை தொடங்க உள்ள நிலையில், அரசு விரைந்து வடிகால் வாய்க்காலை தூர்வார விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.