தமிழ்நாடு அரசின் உயரிய விருதான தகைசால் தமிழர் விருது, இந்த ஆண்டு திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு அறிவிக்கப் பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் அடியெடுத்து வைத்து தந்தை பெரியாரை பின்பற்றி தொடர்ந்து பகுத்தறிவு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருபவர். நாற்பது முறை சிறைவாசம், 60 ஆண்டுகள் இடைவிடாத பத்திரிக்கை பணி, ஓய்வில்லாத இயக்கப்பணி என்று இயங்கி வருகிறார். 90 வயதிலும் சுறு சுறுப்புடன் இயங்கி வருவதோடு, இந்திய நாட்டை அச்சுறுத்தி வரும் சனாதன மதவெறி சக்திகளை எதிர்த்து உறுதியாக களம் கண்டு வருகிறார். விருதுபெறும் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, இத்தகைய சிறந்த பண்பாளருக்கு இந்த விருதை அளிக்கவுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சி நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
கே.பாலகிருஷ்ணன், மாநில செயலாளர், சிபிஐ(எம்)