tamilnadu

காகம் கண்ட தத்துவம்

கோவி.பால.முருகு

கோடைக்  காலம் ஒன்றிலே
    கொளுத்தும் வெயில் தன்னிலே
தேடத் தண்ணீர் இன்றியே
    தெருவில் அலைந்தது காகம்தான்!

பானைத் தண்ணீர் ஓரிடம்
    பதுங்கிக் கிடந்ததைக் கண்டது
வானை விட்டு இறங்கியே
    வந்து அருகில் பார்த்தது! 

பானை அடியில் கொஞ்சமாய்ப்
     படிந்தி ருந்தது தண்ணீரு
வானை அளந்த பறவைக்கு
     வாய்க்கு நீரோ எட்டல!

காகம் மூளை தன்னிலே
     கண்டது தந்திரம் ஒன்றையே
வேகம் கொண்டு பறந்தது
    வேண்டிய கற்களை எடுத்தது

பானை உள்ளே போட்டது
    பானைத் தண்ணீர் வழிந்தது
வேண்டிய மட்டும் குடித்தது
         வெற்றி கண்டு மகிழ்ந்தது!

தங்கு தடைகள் இன்றியே 
    தவழ்ந்து மூழ்கும் பொருளாலே
பொங்கும்  திரவம்  அதனெடை
    பொருளின் இழந்த எடையாகும்!

அறிவியல் சொல்லும் காரணம்
      அதற்கு உள்ளே இருக்குது
ஆர்க்மிடிஸ்   தத்துவ   மின்று
      அதனைத் தானே சொல்லுது!