சிபிஎம் போராட்டம் வெற்றி: சாலை சீரமைக்கும் பணி துவக்கம்
திருவாரூர், ஜுன் 7- திருவாரூரில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்தின் வாயிலாக தற்காலிகமாக சாலை சீரமைக்கும் பணி துவங்கியது. திருவாரூரில் இருந்து அலிவலம், தப்பளாம்புலியூர், புதுப்பத்தூர் வழியாக ஆந்தகுடி வரை செல்லும் தார்ச் சாலை மிகவும் மோசமாக உள்ளதைக் கண்டித்து, கடந்த ஜுன் 3 அன்று தப்பளாம்புலியூர் கடைத் தெருவில், சிபிஎம் சார்பாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் நெடுஞ்சாலை துறையினர் கட்சியின் தலைவர்களிடம் கொடுத்த வாக்குறுதி அடிப்படையில் சாலைகளில் குண்டு குழியுமாக உள்ள இடங்களில் தற்காலிகமாக சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும், நெடுஞ்சாலைத் துறையினருக்கும் அந்தப் பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். மேலும், சாலைப் பணியை உடனடியாக துவங்கியது கட்சியின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என பொதுமக்கள் தெரிவித்தனர்.