வீட்டு மின் கட்டணம் உயராது: அமைச்சர் உறுதி
சென்னை, ஜூன் 29 - கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் சில செய்தி ஊடகங்களில் வீட்டு மின்இணைப்புகளுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என்றும், அனைத்து இலவச மின்சார சலுகைகள் தொடரும் என்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திட்ட வட்டமாகத் தெரிவித்துள்ளார். கடந்த மே 20 அன்று ஏற்கனவே வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என விரிவான விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தும், மீண்டும் மின் கட்டணம் குறித்த வதந்திகள் தொடர்ந்து பரவி வருவதால் அரசின் சார்பில் மீண்டும் தெளிவுபடுத்துவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்சமயம் மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணை யும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடப்படவில்லை. முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டணம் தொடர்பாக ஏதேனும் ஆணை வழங்கினால், அதை நடைமுறைப்படுத்தும் போது வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் எந்தவொரு மின் கட்டண உயர்வும் இருக்காது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போது வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
அரசு பள்ளியில் புனரமைப்பு
தாம்பரம், ஜூன் 29- தாம்பரம் மாநகராட்சியில் அரசு பள்ளிகள், ரூ.29.7 கோடி செலவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 40க்கும் மேற்பட்ட மாநகராட்சி பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிகளுக்கு குடிநீர், கழிவறை, சுற்றுச்சுவர், கூடுதல் வகுப்பறைகள், ஸ்மார்ட் வகுப்புகள் போன்ற அத்தியாவசிய பணிகள் மாநகராட்சி கல்வி நிதியின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பயணிகள் அவதி
சென்னை, ஜூன் 29- சென்னையில் இருந்து ஞாயிறன்று தாய்லாந்து புறப்பட இருந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானம் ரத்து செய்யப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் நோக்கி 146 பயணிகளுடன், தாய் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் புறப்பட தயாரானது. இதையடுத்து விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. கடைசி நேரத்தில், விமானி பிரச்சனையை கண்டறிந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தற்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யும் பணி நடந்து வருகிறது. பயணிகள் அனைவரும் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விமானம் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். விமானம் ஞாயிறன்று திங்கள் காலை தாய்லாந்திற்கு புறப்படும் என தாய் ஏர்வேஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.