பொள்ளாச்சி, டிச. 29- திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்த தாந்தோனி பகுதிக்கு நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த செங்கோட்டையன் மற்றும் குமார் ஆகியோர் சென்றுள்ளனர். அப்பொழுது, இவர்கள் கோழி திருட வந்ததாக கூறி 8 பேர் கொண்ட கும்பல், இருவரையும் கட்டி வைத்து மரக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த செங்கோட்டையன் இறந்துள்ளார். குமாருக்கு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தை அறிந்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத் தலைவர் யு.கே.சிவஞானம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி, சிபிஎம் பொள்ளாச்சி தாலுகா செயலாளர் எம். அன்பரசன், ஆனைமலை கட்சியின் தாலுகா செயலாளர், வி.எஸ்.பரமசிவம் , விதொச கோவை மாவட்ட பொருளாளர் கே.மகாலிங்கம் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற னர். பாதிக்கப்பட்ட நரிக்குறவ சமூக மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். இதன்தொடர்ச்சியாக, பாதிக்கப்பட்ட நரிக்குறவர் சமூக மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும், கொலை வெறித்தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யவேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மகாலிங்கம் தலைமை ஏற்றார். இதில், யுகே. சிவஞானம், வி. ஆர்.பழனிசாமி, சிபிஎம் பொள்ளாச்சி தாலுகா செயலாளர் அன்பரசன், வி. எஸ். பரமசிவம் (மலைவாழ் மக்கள் சங்கம்) , துரைசாமி (விவசாய தொழிலாளர் சங்கம்) , பிரபு (விசிக), மனோகரன் (தபெதிக) உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். முடிவில், ஸ்டாலின் பழனிசாமி நன்றி கூறினார்.