tamilnadu

திருப்பூர் மாநகராட்சி 8 வார்டுகளில் சிபிஎம் போட்டி

திருப்பூர், பிப். 2 - திருப்பூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டு களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 8 வார்டுகளில் போட்டியிடுகிறது. திமுக அணியில் இதற்கான உடன்பாடு புதன்கிழமை கையெழுத்தானது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமை யிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அந்தந்த  மாவட்ட அளவில் தோழமை கட்சிகளின் நிர்வாகிகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி, போட்டியிடும் இடங்கள் குறித்து உடன்பாடு காண்பது என்று முடிவு  செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், திருப்பூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி கள் திமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இடப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் திருப்பூர் மாநகராட்சியின் 50 வார்டுகளை உள்ளடக்கிய திமுக மத்திய மாவட்டத்தில் வார்டு எண் 1, 9, 14, 17, 28, 29 மற்றும் 52 ஆகிய ஏழு வார்டுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. திமுக மத்திய மாவட்டப் பொறுப்பாளர், சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ், மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் ஆகியோர் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். 

அதேபோல் இந்த மாநகராட்சியின் 10 வார்டுகளை உள்ளடக்கிய திமுக வடக்கு மாவட்டத்தில் 53 ஆவது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த உடன்பாட்டில் மாநில செய்தித் துறை அமைச்சரும், திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளரு மான மு.பெ.சாமிநாதன், திமுக வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் இல.பத்மநாபன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் ஆகியோர் கையெழுத்திட்டனர். மார்க்சிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி, தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெயபால் உள்பட இரு கட்சிகளின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

நகராட்சி வார்டுகள்

அதேபோல் தமிழக அரசு புதிதாக தரம்  உயர்த்திய திருமுருகன் பூண்டி நகராட்சியில் வார்டு எண் 10, 11, 14, 16 மற்றும் 22 ஆகிய ஐந்து வார்டுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உடுமலைபேட்டை நகராட்சியில் 13 ஆவது வார்டிலும், தாராபுரம் நகராட்சியில் 28 ஆவது வார்டிலும், வெள்ளகோவில் நகராட்சியில் 7 ஆவது வார்டிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவது என்று திமுகவுடன் உடன்பாடு காணப்பட்டது.

பேரூராட்சி வார்டுகள்

இத்துடன் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி களில் ஊத்துக்குளி பேரூராட்சியில் வார்டு எண் 6, 7 ஆகியவற்றிலும், குன்னத்தூர் பேரூராட்சியில் வார்டு எண்  11-லும், கொளத்துப்பாளையம் பேரூராட்சியில் வார்டு எண் 8-லும், அவிநாசி பேரூராட்சி 12 ஆவது வார்டிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவதென உடன்பாடு காணப்பட்டு உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் இந்த விபரத்தை  புதன்கிழமை தெரிவித்துள்ளார்.