சிபிஎம், விசிக சார்பில் நடைபெற இருந்த காத்திருப்புப் போராட்டம் தற்காலிக ஒத்திவைப்பு
கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்ட விவகாரம்
பொன்னமராவதி, மே 24- நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி பொன்னமராவதியில், சிபிஎம், விசிக கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்றிய விவகாரத்தில், சிபிஎம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதுவரை பொறுமை காக்கவும் என அதிகாரிகளிடம் தெரிவித்திருந்த நிலையில், எந்தவித முன் அறிவிப்பும் இன்றி சிபிஎம், சிஐடியு, விசிக ஆகிய கொடிக்கம்பங்களை அகற்றிய பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து மே 23 ஆம் தேதியன்று பேரூராட்சி அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும் என சிபிஎம்,விசிக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பொன்னமராவதி வட்டாட்சியர் சாந்தா முன்னிலையில் மே 22 ஆம் தேதி சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் மே 25 ஆம் தேதிக்குள் இந்த விவகாரத்தில் மேலதிகாரிகளின் வழிகாட்டுதல்கள் பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாதுரை தெரிவித்தார். அதைத்தொடர்ந்து பேசிய சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பக்ருதீன், விடுதலை சிறுத்தை கட்சியின் நகரச் செயலாளர் மலை.தேவேந்திரன் ஆகியோர், பேரூராட்சி நிர்வாகம் எங்களுக்கு சாதகமான உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லையென்றால், ஏழை எளிய மக்களை, பிரதிபலிக்கக் கூடிய சிபிஎம்மின் சொங்கொடி மற்றும் விசிக கொடிக்கம்பங்களை இருந்த இடத்தில் மே 29 அன்று நடுவோம் என தெரிவித்தனர். கூட்டத்தில், காவல் ஆய்வாளர் பத்மா, பேரூராட்சி அதிகாரிகள், விசிக மணிமுத்து, சிபிஎம் பாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர். இதையடுத்து காத்திருப்புப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.