நாகர்கோவில் மார்ச். 31- கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டாரத்துக்கு உட்பட்ட தெரிசனங்கோப்பு பகுதியில் இன்று வரை காண்போரை நெகிழ வைக்கும் சிற்றுண்டி கடை நடத்தி வருபவர் 92 வயது இளைய கம்யூனிஸ்ட் ஆர்.குமாரவேல். நம் நிருபரிடம் அவர் கூறுகையில் ; நான் ஒரு விவசாய குடும்பத்தை சார்ந்தவன். கேரளாவில் போலீஸ் வேலை கிடைத்தது. ஆனால் போகவில்லை. எனக்கு 85 வயதான மனைவியும் ஆறு பிள்ளைகளும் (3+3) உள்ளனர். ஒரு மகன் வேளாண்மை துறை அதிகாரியாக பணிபுரிகிறான். 18 வயது முதல் கம்யூனிசத்தால் ஈர்க்கப்பட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தேன், கம்யூனிசத்தின் மீது காதல் கொண்டு இன்றோடு 74 ஆண்டுகள் ஆகிறது.
தெரிசனங்கோப்பு ஊரில் முதலில் கட்சி கிளை துவங்கிய போதே நானும் உடனிருந்தேன். இதுவரை 60 ஆண்டுகளாக சிற்றுண்டி நிலையம் நடத்தி வருகிறேன். எனது கடையின் முன் கடந்த நாடாளுமன்ற தேர்தல் வரை கொடிகட்டியிருந்தேன் பின்னர் புறம்போக்கு இடத்தில் கட்டக் கூடாது என அதிகாரிகள் அகற்றிவிட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபக தலைவர்களான ஜி. எஸ். மணி, டி .மணி, ஜெ. ஹேமச்சந்திரன் ஆகியோருடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தேன். தேர்தல் நேரங்களில் அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் தேர்தல் பணிசெய்ய கடையை மூடி விடுவேன். கட்சி மற்றும் நமது மாநாடு வரும் போதெல்லாம் வரவேற்பு கொடுப்பேன். எனது கடை சுவரில் கட்சி விளம்பரம் இன்றுவரை செய்து வருகிறேன். மாநாடுகள் பொதுக்கூட்டங்களில் பங்கேற்பேன். இன்றளவும் நான் கம்யூனிஸ்டாக வாழ்கிறேன் .அதையே பெருமையாக கருதுகிறேன். மதுரையில் நடக்கும் நான் சார்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 ஆவது மாநில மாநாடு சிறக்க வாழ்த்துக்கள் என அவர் வாழ்த்தினார்.