வேலூர், டிச. 22- வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் சத்தத்துடன் கூடிய நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். அங்கே, வருவாய்த் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மீனூர் கிராமத்தில் கடந்த மாதம் 29ஆம் தேதி நில அதிர்வு ஏற்பட்டு பல வீடுகளில் விரிசல் விட்டது. இதனால், பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகினர். அதனைத் தொடர்ந்து இந்த மாதம் 3ஆம் தேதி டிடி மோட்டூர், கமலாபுரம் ஆகிய கிராமங்களில் நில அதிர்வு ஏற்பட்டு அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேறி அச்சத்தில் இருந்தனர். அதனைத் தொடர்ந்து மீண்டும் இரண்டாவது முறையாக டிடி மோட்டூர் கிராமத்தில் நில அதிர்வு ஏற்பட்டு மீண்டும் கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு பேர்ணாம்பட்டு தரைகாடு பகுதியில் பெரிய சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதால் கிராம மக்கள் வீட்டை விட்டு தெருக்களில் வந்து தஞ்சமடைந்தனர். தொடர்ந்து குடியாத்தம் பேரணாம்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் நில அதிர்வு ஏற்படுவது குறித்து, வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக புவியியல் வல்லுனர்களை வைத்து ஆய்வு செய்யப் போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தற்போது எந்த ஒரு ரிக்டர் அளவிலும் இந்த நில அதிர்வு பதிவாகவில்லை என்றும், இதனால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் பேர்ணாம்பட்டு வருவாய்த் துறையினர் தெரிவித்துள்ளனர்.