tamilnadu

தற்கொலை செய்த தஞ்சை பள்ளி மாணவியின் பெற்றோர் நீதிமன்றத்தில் வாக்குமூலம்

தஞ்சாவூர் ,ஜன.23 - பள்ளி விடுதி வார்டனின் தொந்தரவால் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே தற்கொலை செய்து இறந்த பிளஸ்- 2 மாணவி லாவண்யாவின்  தந்தை, சித்தி ஆகியோர் தஞ்சை நீதித்துறை நடுவர் முன்பு ஞாயிற்றுக்கிழமை காலை ஆஜராகி இரண்டரை மணிநேரம் வாக்குமூலம் அளித்தனர்.  அரியலூர் மாவட்டம் வடுகர்பாளை யத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது  முதல் மனைவியின் மகள் லாவண்யா, தஞ்சை  மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு முதல் சேர்ந்து, பள்ளி விடுதியில் தங்கியிருந்து படித்து வந்தார்.  தற்போது பிளஸ் 2 படித்து  வந்த நிலையில், ஜனவரி 9 ஆம் தேதி பூச்சிமருந்தை குடித்து, தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டு,  ஜனவரி 19 ஆம் தேதி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.   விடுதியில் தன்னை அடிக்கடி வேலை வாங்கியதால் மனஉளைச்சல் ஏற்பட்டு இவ்வாறு செய்ததாக மாணவி தெரிவித்தார். இதையடுத்து விடுதி வார்டன் சகாயமேரி கைது செய்யப்பட்டார்.  மாணவியை மதமாற்றம் செய்ய பள்ளி நிர்வாகம் முயற்சித்ததுதான் மாணவி தற்கொ லைக்கு காரணம் என கூறி பாஜகவினரும், மாணவியின் பெற்றோரும் தஞ்சை மாவட்ட எஸ்.பி.யிடம் மனு அளித்தனர். விசாரணைக்குப் பிறகு இதனை தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா கந்தபுனேனி மறுத்தார். இதனிடையே மாணவி மாஜிஸ்திரேட்டி டம் அளித்த வாக்குமூலத்தில், “என்னை விடுதி வார்டன் பில்களை கணக்கு எழுத வேண்டும் என்று தொடர்ந்து தொந்தரவு செய்தார். விடுமுறைகளுக்கு வீட்டிற்கு  அனுப்பமாட்டார்.

என்னை திட்டிக்கொண்டே இருப்பார். இதனால்தான் நான் மருந்து சாப்பிட்டு விட்டேன். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வேறு ஏதுமில்லை” என்று கூறியுள்ளார்.  மாணவியின் உடலை பெற்றோர் பெற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில், உடலை பெற்றுக்கொண்டு அடக்கம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை சனிக்கிழமை யன்று உத்தரவு பிறப்பித்தது. மேலும் மாணவியின் பெற்றோர் தஞ்சை நீதித்துறை நடுவர் முன்பு ஞாயிற்றுக்கிழமை ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில் ஞாயிறு காலை 11.55 மணி யளவில் தஞ்சை 3-வது ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் பாரதி முன்பாக மாணவியின் தந்தை, சித்தி ஆகியோர் ஆஜராகி வாக்கு மூலம் அளித்தனர். மதியம் 2.30 மணிவரை பெற்றோரிடம் தனித்தனியாக நீதிபதி வாக்குமூலம் பெற்றார். இந்த வாக்குமூலம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த வீடியோ உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒப்படைக்கப்படும் என்று நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வாக்குமூலம் கொடுத்த மாணவியின் பெற்றோரை அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் அய்யப்பன் தலைமையில் வந்திருந்த நிர்வாகிகள் காரில் அழைத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.