சென்னை ரயில்வே வாரிய தேர்வினை தமிழகத்திலேயே நடத்த வேண்டும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னை ஆர் ஆர் பி தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஆர்ஆர்பி சென்னை 601 ரயில் நிலைய அதிகாரி காலியிடங்களுக்கு 2020 டிசம்பருக்கும் 2021 ஜூலைக்கும் இடையே முதல்நிலைத் தேர்வு நடத்தியது. இந்த முதல்நிலை தேர்வு தமிழகத்திலேயே உள்ள நகரங்களில் நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகள் மார்ச் 22க்கும் ஏப்ரல் 22க்கும் இடையே வெளியிடப்பட்டன. தேர்வானவர்களுக்கு இரண்டாம் நிலை தேர்வு நடத்தப்பட வேண்டும். இந்த தேர்வு தெற்கு ரயில்வேயில் சென்னை ஆர் ஆர் பி-க்கு விண்ணப்பித்தவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் வைப்பதுதான் நியாயமானதும் வசதியானது மாகும். ஆனால் ஜம்மு-காஷ்மீரில் உள்ள சம்பா விலும் அலகாபாத்திலும் மைசூரு உடுப்பி சிமோகா விலும் தேர்வு மையங்கள் வைக்கப்பட்டுள்ளன. மே 9ஆம் தேதி தேர்வு நிச்சயிக்கப்பட்டுள்ளது. சிஇஎன்1/ 2019 என்ற விளம்பரத்தின் அடிப்படையில் விண்ணப்பித்த இந்த தேர்வர்களுக்கு இப்படி வெளிமாநிலங்களில் மையங்களை ஏற்படுத்துவது வேற்று மொழி பேசும் இடங்களில் தமிழக விண்ணப்பதாரர்கள் திணற வைப்பதற்கு வழிவகுக்கும். மாற்றுத்திறனாளியான ஒரு விண்ணப்பதாரருக்கு அலகாபாத் மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது அனைத்தும் ஜனநாயக பூர்வமற்றது மட்டுமல்ல நியாயமானதும் இல்லை. தேர்வர்களுக்கு எதிரான புறக்காரணியாக தேர்வு நடைமுறைகள் அமையக்கூடாது.
இது குறித்து சென்னை ஆர் ஆர் பி தலைவர் திரு அழகர்ஜெகதீசன் அவர்களுக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். அவரை இதில் தலையிட்டு இந்த விண்ணப்பதாரர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு எழுத அனுமதிக்குமாறும் ஏற்பாடு செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளேன்.