ரூ.6.42 கோடியில் காய்கறி அங்காடி காணொலி வாயிலாக முதல்வர் திறப்பு
புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில்
புதுக்கோட்டை, மே 29- புதுக்கோட்டை மாநகராட்சி சந்தைப் பேட்டையில் ரூ.6.42 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள தினசரி காய்கறி அங்காடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து, புதிதாகக் கட்டப்பட்டுள்ள அங்காடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் கலந்து கொண்டு தெரிவிக்கையில், இந்த அங்காடியில் 160 கடைகள், ஓட்டுநர்கள் ஓய்வு அறை, சிற்றுண்டியகம், ஆண், பெண் கழிப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் 3711.20 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்தக் அங்காடியினை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மு.அருணா, மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், துணை மேயர் எம்.லியாகத் அலி, வட்டாட்சியர் மு.செந்தில்நாயகி, மாமன்ற நல அலுவலர் காயத்ரி சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.