tamilnadu

img

தூத்துக்குடி துறைமுக ஆணையத் தேர்தலில் 8 ஆவது முறையாக சிஐடியு வெற்றி

தூத்துக்குடி,மே 2-  தூத்துக்குடி துறைமுக ஆணையத்திற்கு தொழிலாளர் பிரதிநிதிகளை தேர்வு செய்யும் தேர்தலில் சிஐடியு சங்கம் 8 ஆவது முறையாக முதன்மை சங்கமாக வெற்றிபெற்றுள்ளது. நாட்டின் 12 பெரிய துறைமுகங்களில் பெரும் துறைமுகம் சட்டம் 1963 இல் கீழ் இயக்கப்பட்டு வந்தன.  ஒன்றிய  அரசு கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்திய துறைமுகங்களை ஆணையங்களாக மாற்றும் வகையில் பெருந்துறைமுகம் ஆணைய சட்டம் 2021 என்ற புதிய சட்டத்தை நிறைவேற்றி உள்ளது.

இந்த சட்டத்தின் அடிப்படையில் துறைமுகங்களை நிர்வகிக்கும் துறைமுக போர்டுகளுக்கு பதிலாக போர்ட் அதாரிட்டி என்ற புதிய ஆணையங்களை உருவாக்கி உள்ளது . இதன் மூலம் ஒவ்வொரு துறைமுகமும்  தனித்தனி ஆணையமாக மாற்றப் பட்டுள்ளது.  இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள ஆணையங்களில் இரண்டு தொழிலாளர் பிரதிநிதிகள் இடம்பெறுவார்கள். தூத்துக்குடி துறைமுக ஆணையத்திற்கு தொழிலாளர் பிரதிநிதிகளை தேர்வு செய்யும் ரகசிய வாக்கெடுப்பு ஏப்ரல் 30 அன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் துறைமுகத்தில் செயல்பட்டு வரும் துறைமுக ஜனநாயக ஊழியர் சங்கம்(சிஐடியு), போர்ட் மெரைன்ஸ் & ஜெனரல் ஸ்டாப் யூனியன், தூத்துக்குடி போர்ட் யூனியன் ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன், தூத்துக்குடி போர்ட் எம்ப்ளாயிஸ் டிரேட் யூனியன், தூத்துக்குடி நேஷனல் ஹார்பர் ஓர்க்கர்ஸ் யூனியன் ஆகிய ஐந்து சங்கங்கள் போட்டியிட்டன.  இதில் சிஐடியுவுடன் இணைந்த துறைமுக ஜனநாயக ஊழியர் சங்கம் கடந்த 10 நாட்களாக தொழிலாளர்களை சந்தித்து ஒன்றிய அரசின் பொதுத்துறை விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளின் காரணமாக நாட்டின் அனைத்து  துறைமுகங்களில் பணி செய்யும் 30 ஆயிரம் தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதையும் துறைமுக நலன்களுக்கு எதிராக ஒன்றிய அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைக் கண்டித்தும்  தொடர் பிரச்சாரங்களை நடத்தியது.

மத்திய தொழிலாளர் துணை ஆணையர் (சென்னை) தலைமையில் தொழிலாளர் துறை அதிகாரிகள் சனிக்கிழமையன்று துறைமுக ரகசிய வாக்கெடுப்பை நடத்தினர். இந்த தேர்தல் தூத்துக்குடி உள்ளிட்ட மூன்று பூத்களில் நடைபெற்றது. இதில் 433 துறைமுக தொழிலாளர்கள் வாக்களிக்க வேண்டும்.  தொழிலாளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினார்கள். காலை 6 மணி முதல் மாலை 3.30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது மாலை 5 மணிக்கு பதிவான வாக்குகள் துறைமுக நிர்வாக அலுவலகத்தில்  எண்ணப்பட்டன.  இதில் 428 ஓட்டுகள் பாதிவாகின.  இதில் 2 ஓட்டுகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 426 ஓட்டுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

வாக்கு விபரங்கள் 

இதில் துறைமுக ஜனநாயக ஊழியர் சங்கம் (சிஐடியு) 100 வாக்குகளும், தூத்துக்குடி போர்ட் மெரைன்ஸ் & ஜெனரல் ஸ்டாப் யூனியன் 85 வாக்குகளும், தூத்துக்குடி போர்ட் யூனியன் ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் 82 வாக்குகளும், தூத்துக்குடி போர்ட் எம்ப்ளாயிஸ் டிரேட் யூனியன் 81 வாக்குகளும், தூத்துக்குடி நேஷனல் ஹார்பர் ஓர்க்கர்ஸ் யூனியன் 78 வாக்குகள் பெற்றன. இதில் சிஐடியு 100 வாக்குகள் பெற்று 15 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 8 ஆவது முறையாக முதன்மை சங்கமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.  முதல் இரண்டு இடங்களை பிடித்த சங்க பிரதிநிதிகள் புதிதாக அமையவிருக்கும் துறைமுக ஆணையத்தில் உறுப்பினராக தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள் மூன்று ஆண்டுகாலம் இந்த பதவியை வகிப்பார்கள்.

 மொத்த வாக்குகளில் 20 சதவீத வாக்குகளைப் பெற்ற தொழிற்சங்கங்கள் அங்கீகார தொழிற்சங்கங்களாக அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் முதலிடம் பிடித்த துறைமுக ஜனநாயக ஊழியர் சங்கத்தினரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே. பி. ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.எஸ். அர்ஜுனன், தா.ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.