திருச்சி விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்க சிஐடியு எதிர்ப்பு
இந்திய தொழிற்சங்க மையத்தின் (சி.ஐ.டி.யு.) மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், திருச்சி விமான நிலையம் கடந்த ஆண்டு தான் பல கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேலும் விமான நிலைய ஓடுதளமும் விரிவாக்கம் செய்ய மாநில அரசு, பல ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி விமான நிலைய நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளது. இந்தநிலையில் திருச்சி விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக செய்திகள் வருகிறது. எனவே தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக வருவாய் ஈட்டக்கூடிய 2 ஆவது விமான நிலையமாக விளங்கும் திருச்சி விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது. வருகிற 6 ஆம் தேதி மதுரையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய மாநாட்டு பேரணியில், திருச்சியில் இருந்து சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 500 தொழிலாளர்கள் கலந்து கொள்வது. அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் வருகிற 8 ஆம் தேதி திருச்சி மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் திரளாக கலந்து கொள்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.