tamilnadu

கலகமூட்டுவோருக்கு இடம் கொடுக்காதீர் முதலமைச்சர் வேண்டுகோள்

கலகமூட்டுவோருக்கு இடம் கொடுக்காதீர்  முதலமைச்சர் வேண்டுகோள்'

சென்னை, ஜூலை 17 - “சமூக நீதியையும் மதச்சார்பற்ற நல்லிணக்கத்தையும் உருவாக்க வாழ்நா ளெல்லாம் உழைத்த பெருந்தலைவரின் கனவுகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம். வீண்  விவாதங்களை தவிர்ப்போம்” என முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி யுள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், “கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர்கள். பெருந்தலைவர் காமராசரை ‘பச்சைத் தமிழர்’ என்று போற்றியவர் தந்தை பெரியார். குடியாத்தம் இடைத்தேர்தலில் பெருந்தலைவர்க்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என்று முடிவெடுத்தார் பேரறிஞர் அண்ணா. பெருந்தலைவர் மறைந்தபோது ஒரு மகன் போல நின்று இறுதி மரியாதை ஏற்பாடுகளைச் செய்து, நினைவகம் அமைத்து, அவரது பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் தமிழினத் தலைவர் கலைஞர். உடல் நலிவுற்ற நிலையில், எனது திருமணத்திற்கு நேரில் வந்து பெருந்தலைவர் வாழ்த்தியது என் வாழ்நாளில் கிடைத்தற்கரிய பெரும் பேறு. அத்தகைய பெருந்தலைவர், பெருந்தமிழர் குறித்து பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல. மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பைக் காக்கும் வகையில் தான், எந்தக் கருத்தும் பகிரப்பட வேண்டும். சமூக நீதியையும் மதச்சார்பற்ற நல்லிணக்கத்தையும் உருவாக்க வாழ்நாளெல்லாம் உழைத்த பெருந்தலை வரின் கனவுகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம். வீண் விவாதங்களைத் தவிர்ப்போம்” என தெரிவித்துள்ளார்.