சென்னை, ஏப்.22- மேல் வளி மண்டலத்தின் கீழடுக்கு களில் நிலவும் சுழற்சி காரணமாக தமிழ் நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் ஞாயிறன்று (ஏப்.23) இடி மின்னலுடன் லேசான மழையும் பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏப். 24 முதல் 26 ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.