நாகப்பட்டினம், பிப்.8- நாகப்பட்டினம் மாவட்டத்தில் தலைஞாயிறு, கச்ச நகரம், வலிவலம், பட்டமங்கலம், சீரங்குடிபுலியூர், சீயத்த மங்கை, ஏனங்குடி ஆகிய ஊராட்சிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் விற்பனை நிலையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி கலந்து கொண்டார். சென்னை தரக் கட்டுப்பாட்டு மைய அதிகாரி யூனஸ், பெங்களூரு தரக் கட்டுப்பாட்டு மைய அதிகாரி பிரபாகரன், ஓய்.போயோ ஆகியோர் கொண்ட ஆய்வுக்குழு, நெல்மணிகளில் உள்ள ஈரப்பதம் குறித்து ஆய்வுகளில் ஈடுபட்டது. ஏற்கனவே 19 சதவீதம் என்ற அளவில் விவசாயிகளிடமிருந்து வாங்கப்படும் நெல்மணிகளின் ஈரப்பதம் இருக்கலாம் என்ற நிலையில், தற்போது விவசாயிகள் 22 சதவீதம் ஈரப்பதத்தை உயர்த்தி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். நிகழ்வில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி, மாவட்ட ஆட்சியர் மரு.அருண் தம்புராஜ், மீன் வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை
இதேபோல், மயிலாடுதுறை மாவட்டம் மங்கை நல்லூர், செம்பனார்கோவில், வைத்தீஸ்வரன்கோவில், மயிலாடுதுறை பகுதிகளிலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தனர். ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் உடனிருந்தனர்.