tamilnadu

img

ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமிரா : ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை:
பெண்கள், முதியோர் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில்,  ரயில் பெட்டிகளில்  சிசிடிவி கேமராக்களை பொருத்துவது குறித்து நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த வினோத், 2008 ஆம் ஆண்டு திருச்சி ரயில்வே காவல் துறையில் பணியமர்த்தப்பட்டுள்ளார். 2014  -ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில், கொடை ரோடு முதல் திருச்சிராப்பள்ளி வரை பெண் காவலர் ஒருவருடன் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கிருந்த பெண் பயணி ஒருவரிடம் முறையற்ற வகையில் பேசியதாக, சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார்.  இந்த புகாரின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து 2015 ல் வினோத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த உத்தரவை தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் உறுதி செய்தார்.இதனை ரத்து செய்யக்கோரி வினோத் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.  இந்த வழக்கின் மீதான விசாரணை வியாழனன்று  நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம்  முன்பு நடைபெற்றது.

அப்போது நீதிபதி கூறுகையில், இந்த வழக்கை பொறுத்தவரை, குற்றம் சாட்டப்பட்டவருடன் பணியாற்றிய பெண் காவலரும், காவலர் வினோத் அன்று மது அருந்தியிருந்ததாகவும் பெண்களிடம் முறையற்ற வகையில் பேசியதாகவும் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்துள்ளனர். இவை காவலர் வினோத் மீதானகுற்றச்சாட்டை உறுதிசெய்ய போதுமானவை யாக உள்ளன . காவல் நிலையத்தில் இவர் மீதுவழக்குப் பதிவு செய்து, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் துறை ரீதியான நடவடிக்கை மட்டுமே எடுக்கப்பட்டுள் ளது. இது வேதனை அளிக்கிறது. ஓடும் ரயில்களில்முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது சந்தேகத்திற்கு இடமில்லாதது என்பதோடு அவசியமான  ஒன்றாகவும் உள்ளது. இதுபோன்ற புகார்கள் எழும் நிலையில் அவற்றை உறுதிசெய்ய சிசிடிவி காட்சிகள் பெருந்துணை புரியும். இதனால் தவறிழைத்தவர்கள் தப்பிக்காமல் தண்டனை பெறுவதை உறுதி செய்யலாம். சமீப காலமாக  பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரித்து வரும் நிலையில், ரயில்களில்  இரவு நேரங்களில் இது போன்ற தொல்லைகள் எழுவதாக புகார்கள் எழுகின்றன. ஆகையால், இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும், தென்னக ரயில்வேயின் பொது மேலாளர், ரயில்களில் பயணிக்கும் பெண்கள், முதியோர், குழந்தைகள் ஆகியோரின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில்,  ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமிராக்களை பொருத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய  வேண்டும். ஓடும் ரயில்களில் பணிபுரியும் பாதுகாவலர்களுக்கு, பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக வழிகாட்டுதல்களை  பிறப்பிக்க வேண்டும். பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தென்னக ரயில்வே விரைவாக இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

;