tamilnadu

img

போராடிய மாணவர்களை பழிவாங்குவதா?

ஒன்றிய உயர்கல்வி அமைச்சரிடம் சு.வெங்கடேசன் எம்.பி., முறையீடு

ஒன்றிய உயர்கல்வி அமைச்சரிடம் சு.வெங்கடேசன் எம்.பி., முறையீடு புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 2019ஆம் ஆண்டு கல்விக்கட்டண உயர்வை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக போராடிய மாணவர்களை பழிவாங்கும் நோக்கத்துடன் தற்போது அவர்களை கல்வி வளாகத்திற்குள்ளேயே நுழைய தடைவிதித்து கடுமையான நடவடிக்கை மேற்கொண்டிருப்பது அநியாயமானது என்று, ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் முறையிட்டுள்ளார். இப்பிரச்சனை தொடர்பாக கடந்த டிசம்பர் 27 அன்று தர்மேந்திர பிரதானுக்கு அவர் விரிவான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். பல்கலைக்கழகத்தில் 300சதவீதம் அளவிற்கு உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணத்தை ரத்துசெய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் மாணவர்கள் நடத்திய போராட்டம், 2020 மார்ச் மாதத்தில் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படியும், பல்கலைக்கழக நிர்வாகம் அளித்த உத்தரவாதத்தின்படியும் விலக்கிக் கொள்ளப்பட்ட போதிலும், தற்போது மாணவர்களை பழிவாங்குவது எந்தவிதத்திலும் ஏற்க முடியாதது என்று சு.வெங்கடேசன் எம்.பி., தனது கடிதத்தில் கூறியுள்ளார். இந்த நடவடிக்கைகளை உடனடியாக ரத்து செய்து, புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்தில் கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட ஜனநாயக உரிமைகளை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறும் ஒன்றிய கல்வி அமைச்சரை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆளுநருக்கு கடிதம்

புதுச்சேரி,ஜன.4- 11 மாணவர்கள் மீதான புதுச்சேரி மத்திய  பல்கலைக்கழக நிர்வாகத்தின் நடவடிக்கை யை ரத்து செய்யக்கோரி புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு ஜனநாயக மாணவர் இயக்கங்களின் கூட்டியக்கம்  அனுப்பியுள்ள மனு வருமாறு:  புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக கல்வி கட்டண உயர்வு, இலவச பேருந்து சேவை ரத்து, அனைத்து பாடப்பிரிவுகளிலும் 25 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கக் கோரி 2019 ஆம் கல்வி ஆண்டு முதல் பல கட்ட போராட்டத்தை மாணவர் பேரவை, மாணவர் அமைப்புகள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் முன்னின்று நடத்தின.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பல மடங்கு உயர்த்தப்பட்ட கல்வி கட்டணத்திற்கு எதிராகவும், புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீத இடங்களை அனைத்துப் பாடப்பிரிவுகளிலும் வழங்கிட கோரி கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி முதல் 33 நாட்களுக்கு மேலாக புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாணவர் பேரவை சார்பில் பலகட்ட போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் புதுச்சேரி பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர் பேரவைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அவ்வழக்கில் கல்வி கட்டணம் உயர்வு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் மாணவர் பேரவையோடு சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் கூறியதையடுத்து, போராட்டம் திரும்பப்பெறப்பட்டது. நீதிமன்ற தலையீட்டின் காரணமாக பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் அநியாய கல்விக்கட்டண உயர்வை திரும்பப்பெற பல்கலைக்கழக நிர்வாகம் முனைப்பு காட்டவில்லை. இந்நிலையில் புதுச்சேரி பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களை பழிவாங்கும் நோக்கில், ஆகஸ்ட் 2021 இல் கல்வி கட்டண உயர்வுக்காக பிப்ரவரி 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டம் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு மாணவர்கள் பதில் அளித்தனர்.

இச்சூழலில் சட்டத்திற்கு புறம்பான வகையில் ஒன்றரை ஆண்டுகள் கழித்து மாணவர் பேரவை தலைவர் உள்ளிட்ட 11 மாணவர்கள் 5 ஆண்டுகள் புதுச்சேரி பல்கலையில் கல்வியை தொடர தடை, 5. ஆண்டுகள் பல்கலைக்கழக வளாகத்தில் நுழைய தடை, 10 ஆயிரம்  ரூபாய் அபராதம் விதித்து கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி விதித்துள்ளது. ஜனநாயக நாட்டில் பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் என்பது அரசியல் அமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமை என்கிற சூழலில் புதுச்சேரி பல்கலைக்கழகம் மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்குவதாக நினைத்து பழிவாங்கும் செயலில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல. இந்நிலையில் கடந்த 2021 டிசம்பர் 30 அன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பை பறிக்கும் இச்செயலை நாம் ஒரு போதும் புதுச்சேரி மாநிலத்தில் அனுமதிக்கக் கூடாது. ஆகவே கட்டண உயர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைக்குழு ஆணையை உடனடியாக ரத்து செய்திடவும், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் உயர்த்தியுள்ள அநியாய கட்டண உயர்வை திரும்பப்பெறவும், உள்ளூர் மாணவர்களுக்கு அனைத்து பாடப்பிரிவுகளிலும் 25 சதவீத இடங்களை பெற்றிடவும் தாங்கள் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டி வலியுறுத்துகிறோம். கட்சிகள் சார்பில் மேற்கூறிய பிரச்சனை சம்பந்தமாக தங்களை நேரில் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கி தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஆளுநர் அலுவலகம் முன்பு இன்று போராட்டம்

 இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக மாணவர் இயக்கங்களின் கூட்டி யக்கம் சார்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகை முன்பு ஜனவரி 5 அன்று காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் படுகிறது.  இப்போராட்டத்திற்கு திமுக மாணவரணி அமைப்பாளர் எஸ்.பி. மணிமாறன் தலைமை வகிக்கிறார்.  எஸ்எப்ஐ பிரதேச தலைவர் எஸ்.ஜெயபிரகாஷ், அனைத்திந்திய மாணவர் பெரு மன்ற மாநிலச் செயலாளர் எஸ். எழிலன், முற்போக்கு மாணவர் கழக மாநிலச் செயலாளர் ப. இளவரசன், என்எஸ்யுஐ மாநிலத் தலைவர் எஸ்.கல்யாணசுந்தரம்,  புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் சீ. சு.  சுவாமிநாதன், புரட்சிகர இளைஞர்  கழகம் அமைப்பாளர்  எஸ்.ராஜராஜன்  ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா,   இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மாநிலத்  தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன்,   இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர்  அ.மு‌.  சலீம், எஸ்எப்ஐ அகில இந்திய தலைவர் வி.பி.  சானு,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மத்தியக்குழு உறுப்பினர் சுதா சுந்தரராமன், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மைச் செயலாளர் தேவ பொழிலன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநிலச் செய லாளர்  அ. கபிரியேல், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட்) கட்சி மாநிலச்செய லாளர் சோ.பாலசுப்பிரமணியம் ஆகியோர் கண்டன உரையாற்றுகின்றனர்.எஸ்எப்ஐ பிரதேச செயலாளர் சொ.பிரவீன்குமார் மற்றும் ஏராளமானோர் கலந்துகொள்கின்றனர். முன்னதாக கட்டண உயர்வைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கம் தொடர்ந்து பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளது.