tamilnadu

img

பாலமேடு ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த காளைகள்

கல்லூரி மாணவருக்கு கார் பரிசு - இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

மதுரை, ஜன.17- பொங்கல் பண்டிகையை முன்னி ட்டு மதுரை மாவட்டம் பாலமேடு மஞ்சமலைசுவாமி ஆற்றுத் திடலில்  திங்களன்று ஜல்லிக்கட்டு நடை பெற்றது. போட்டி தொடங்குவதற்கு முன் மாவட்ட ஆட்சிய அனீஷ்சேகர் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன் (சோழவந்தான்), பூமிநாதன் (மதுரை தெற்கு) ஆகியோர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள், விழாக்குழுவினர் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து அமைச்சர் பி.மூர்த்தி ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைத்தார்.  காலை எட்டு மணிக்குத் துவங்கிய ஜல்லிக்கட்டு மாலை 4.50 மணிக்கு நிறைவடைந்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டில் 860 காளைகள் பங்கேற்றன. இதில் 23 காளைகளைப் பிடித்த மதுரை சின்னபட்டி தமிழரசன் முதல் பரிசை வென்றார். அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. 

19 காளைகளை பிடித்த பாலமேடு மணிகண்டன்  இரு சக்கர வாகனத்தை இரண்டாவது பரிசாக பெற்றார். 15 காளைகளை பிடித்த பாலமேட்டைச் சேர்ந்த ராஜா மூன்றாவது இடம் பிடித்தார். திருநெல்வேலி பொன்னர் சுவாமி கோவில் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு உரிமையாளருக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. திண்டுக்கல்லைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் காளை இரண்டாவது பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது. ஐல்லிக்கட்டில் 31 பேர் காயமடைந்தனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு செவ்வாயன்று காலை நடைபெறு கிறது. 

படங்கள் : ஜென்னி