திருவையாறு அருகே மாட்டு வண்டி போட்டி
தஞ்சாவூர், மே 18- தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே, புறவழிச்சாலையில் திமுக திருவையாறு வடக்கு ஒன்றியம் இளைஞரணி சார்பில் மாட்டு வண்டி, குதிரை வண்டி போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியை, திமுக தஞ்சாவூர் மத்திய மாவட்டச் செயலரும், திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான துரை. சந்திரசேகரன், மக்களவை உறுப்பினர் ச.முரசொலி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி, சிவகங்கை உள்பட 15 மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் அதிகமானோர் மாட்டு வண்டிகளுடனும், குதிரை வண்டிகளுடனும் பங்கேற்றனர். மொத்தம் 13 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்ற பெரிய மாட்டு வண்டிப் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு முதல் பரிசாக ரூ. 30 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ. 25 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ. 20 ஆயிரமும் வழங்கப்பட்டன. இதேபோல், 10 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்ற சின்ன மாடு, 8 கி.மீ. தொலைவுக்கு பூஞ்சிட்டு மாடு போட்டியும், 13 கி.மீ. தொலைவுக்கு நடு குதிரை வண்டி போட்டி, 10 கி.மீ. தொலைவுக்கு சின்ன குதிரை வண்டி போட்டியும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில், திமுக திருவையாறு நகரச் செயலர் நாகராஜன், ஒன்றிய திமுக செயலர்கள் சிவசங்கரன், கௌதமன், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் வேல் வேந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.