tamilnadu

img

தென்காசியில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில மாநாடு

தென்காசி, மார்ச் 18-  தென்காசியில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் 9-ஆவது மாநில மாநாடு வெள்ளியன்று துவங்கி இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது.  மாநாட்டிற்கு சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.செல்லப்பா தலைமை வகித்தார். அகில இந்திய பொதுச் செயலாளர் பி.அபிமன்யு துவக்கி வைத்தார். பிஎஸ்என்எல் தலைமை பொது மேலாளர் ஜி.முரளிதரன் சிறப்புரையாற்றினார்.  தொடர்ந்து பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றி பணி நிறைவு பெற்ற சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.செல்லப்பா, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பி.இந்திரா உள்ளிட்ட 10 பேருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.  தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கெளரவத் தலைவர் பி.சம்பத், தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரான கே.சுவாமிநாதன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் பி.அபிமன்யு உள்ளிட்டோர் பணிநிறைவு பெற்றோரை பாராட்டி பேசினர். சென்னை பிஎஸ்என்எல் ஊழியர் சங்க நிர்வாகி எம்.ஸ்ரீதர் சுப்பிரமணியன், என்.எப்.டி.இ மாநில நிர்வாகி நடராஜன், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழுவின் மாநில நிர்வாகி பெர்லின் கனகராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

 சனிக்கிழமையன்று இரண்டாவது நாளாக மாநாடு நடைபெறவுள்ளது. இதில், மாநிலச் செயலாளர், மாநிலப் பொருளாளர் அறிக்கை சமர்ப்பித்தல், விவாதம், தொகுப்புரை, புதிய நிர்வாகிகள் தேர்வு, தீர்மானங்கள் நிறைவேற்றுதல், நிறைவுரை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.  மாநாட்டில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஏ.பாபு ராதாகிருஷ்ணன், மாநில பொருளாளர் கே.சீனிவாசன், வரவேற்பு குழு நிர்வாகிகள் எம்.ஆண்ட பெருமாள், என்.சூசை மரிய அந்தோணி, எம்.நாசர்தீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநாட்டிற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பொதுச் செயலாளர் பி.அபிமன்யு, “ஒன்றிய அரசு பிஎஸ்என்எல் நிர்வாகத்தின் வளர்ச்சிக்கு முழுமனதுடன் ஒத்துழைப்பு வழங்குவது இல்லை. பிஎஸ்என்எல் நிர்வாகம் வளர்ச்சி அடைந்து விட்டால் அது அம்பானி நடத்துகிற ஜியோ நிறுவனத்திற்கு இடையூறாக அமைந்து விடும் என்கிற எண்ணத்தில் ஒன்றிய அரசு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வளர்ச்சியை பல்வேறு வகையிலும் தடுத்து வருகிறது” எனக் குற்றம்சாட்டினார்.

“கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது கட்டணங்களை 20 முதல் 25 சதவீதம் உயர்த்தியுள்ளன. ஆனால் பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனம் கட்டணத்தை உயர்த்தவில்லை. ஜியோ நிறுவனம் கட்டணத்தை பலமடங்கு உயர்த்தியதால் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் ஜியோ நிறுவனத்தில் இருந்து வெளியேறி படிப்படியாக பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்கள். பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தேவையான  4 ஜி, 5 ஜி போன்ற வசதிகளை செய்து கொடுத்தால் பொதுமக்கள் தொடர்ந்து பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ஆதரவு தர தயாராக இருக்கிறார்கள். ஆனால் ஒன்றிய அரசு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வளர்ச்சியை தடுப்பதில் குறியாக செயல்பட்டு வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாத ஊதியம் உள்ளிட்ட அரசு சலுகைகள் எதுவும் முறையாக வழங்கப்படுவதில்லை. இதனால் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு வெளியேறிவிட்டனர். இதனைக் கண்டு வருத்தப்பட வேண்டிய ஒன்றிய அரசு மகிழ்ச்சி அடைகிறது. காரணம், பிஎஸ்என்எல் நிறுவனத்தை விலை கொடுத்து வாங்க நினைக்கின்ற முதலாளிகள் பிஎஸ்என்எல் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். எனவே ஒன்றிய அரசு பல்வேறு வகைகளிலும் பிஎஸ்என்எல் நிறுவன ஊழியர்களை விருப்ப ஓய்வு பெற மறைமுகமாக கட்டாயப்படுத்துகிறது. 5 ஜி தொழில்நுட்ப வளர்ச்சியை பெற ஒன்றிய அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எந்த காரணம் கொண்டும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது” என்றும் அவர் வலியுறுத்தினார்.