tamilnadu

img

வியாபாரிகளால் விலை குறைத்து வாங்கப்படும் கருப்பு திராட்சை

சின்னாளபட்டி, மே 15-  திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சின்னாளபட்டி அருகேயுள்ள ஜாதிக் கவுண்டன்பட்டி, சாமியார் தோட்டம், செட்டியபட்டி, ஊத்துப்பட்டி, பெருமாள் கோயில்பட்டி, எ.வெள்ளோடு, கல்லூத்து, சிறுநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் வசித்து வருகின்றனர் .இவர்கள் வாழவாதாரமே திராட்சை விவசாயம்தான் . இப்பகுதிகளில் அதிக அளவில் கருப்பு பன்னீர் திராட்சை விளைவிக்கப்படுகிறது. ஆண்டுக்கு 3 முறை மகசூல் எடுக்கப்படுகிறது.  இதுகுறித்து விவசாயி கருப்பையா கூறுகையில், பயிர் செய்து ஒரு ஆண்டுக்குப் பிறகு மகசூல் எடுக்கலாம். 15 முதல் 20 வருடம் வரை நல்ல மகசூல் தரும். தற்போது திராட்சைப் பழத்தில் வண்டு, பூச்சி நோய் தாக்குதல், செவட்டை, சாம்பல் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது .இதனால் வாரத்திற்கு இரு முறை மருந்து தெளித்து வருகிறோம். தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் வாரத்திற்கு 3 நாட்கள் சொட்டு நீர் பாசனம் மூலம் தண்ணீர் செலுத்தி வருகிறோம்.

இங்கு விளையும் திராட்சைகள் மதுரை, சேலம், சென்னை ,கன்னியாகுமரி ஆகிய ஊர்களுக்கும் கேரளா ,ஆந்திரா. கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களுக்கும் அனுப்பிவைக்கப்படுகிறது. தற்போது ஒரு கிலோ கருப்பு திராட்சை 30 ரூபாய் என்ற விலையில் எங்களிடம் இருந்து வியாபாரிகள் வாங்குகின்றனர். ஒரு ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் வரை செலவு செய்கிறோம். வியாபாரிகள் கிலோ 50 ரூபாய்க்கு வாங்கினால் ஓரளவாவது லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. இப்பகுதியில் விளையும் திராட்சை மருத்துவக் குணம் உள்ளது. 3 நாட்கள் வரை பழங்கள் உதிராமல் அப்படியே இருக்கும் .தற்போது போதிய விலை கிடைக்காததால் குடும்பத்தோடு சாலை ஓரங்களில் வைத்து விற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். கார்த்திகை மாதம் சபரிமலைக்கு செல்லும் ஐயப்பப் பக்தர்கள் எங்களிடம் பெட்டி பெட்டியாக திராட்சை பழங்கள் வாங்கி செல்வார்கள். திராட்சையை அரசே நேரடியாக கொள்முதல் செய்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.