குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் குறித்த விழிப்புணர்வு பேரணி
திருவாரூர், ஜுன் 12- திருவாரூர் புதிய ரயில்நிலையத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் தொழிலாளர் நலத்துறையின் சார்பில், குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் குறித்த விழிப்புணர்வு பேரணியினை, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே. கலைவாணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பேரணியானது, திருவாரூர் புதிய இரயில் நிலையத்திலிருந்து துவங்கி பழைய பேருந்து நிலையம், பனகல்ரோடு, கீழவீதி, தெற்கு வீதி வழியாக வ.சோ. ஆண்கள் மேல்நிலை பள்ளியினை சென்றடைந்தது. இப்பேரணியில் 300-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர், அதனைத்தொடர்ந்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் தொழிலாளர் நலத்துறையின் சார்பில், குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் குறித்த உறுதிமொழி ஏற்பு மற்றும் தொழிலாளர் நலத்துறையின் சார்பில், குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் - ஜுன் 12-ஐ முன்னிட்டு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யு.கருண்கரட், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடராசன், திருவாரூர் நகர்மன்றத் தலைவர் புவனபிரியா செந்தில், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் சார்பு நீதிபதி மாணிக்கம், முதன்மை கல்வி அலுவலர் திரு.சௌந்தர்ராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.