விழுப்புரம், மே 16- சமூக ஒடுக்குமுறைகளுக்கு முடிவு கட்டுவோம், சாதியப் பாகுபாடுகளை கைவிடு வோம், தமிழ்நாட்டை சமத்துவபுரமாக மாற்று வோம் என்ற முழக்கத்துடன் ஜூன் மாதம் 4ஆவது வாரத்தில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஒன்றியங்கள் மற்றும் நகரங்களில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்துவது என்று விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற பட்டியலின பழங்குடி மக்கள் உரிமை மீட்பு மாநாடு முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் சாதிய ஒடுக்கு முறைகளை ஒழித்துக் கட்டவும், சாதியற்ற சமத்துவ சமூ கத்தை படைத்திடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பட்டியலின பழங்குடி மக்கள் உரிமை மீட்பு மாநாடு விழுப்புரம் பேருந்து நிலையம் அருகில் நகராட்சி திடலில் செவ்வாயன்று (மே 16) நடைபெற்றது. மாநாட்டின் துவக்கமாக புதுகை பூபாளம் குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அத னைத் தொடர்ந்து நடந்த பொது மாநாட்டுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் என். சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநாட்டின் வரவேற்பு குழு தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பின ருமான ஆர்.ராமமூர்த்தி வரவேற்றார். வரவேற்பு குழு பொருளாளர் எம்.புருஷோத்தமன் முன்னிலை வகித்தார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, சிபிஎம் மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலை வர் கே.எஸ். அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், பாலபிரஜாபதி அடிகளார், ரவிக்குமார் எம்பி (விசிக), மு. செந்திலதிபன் (மதிமுக), தி.வேல் முருகன் எம்எல்ஏ (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), துரை சந்திரசேகரன் (திராவிடர் கழகம்), கு. ஜக்கையன் (ஆதித்தமிழர் கட்சி) வேல்முருகன் (இமானுவேல் பேரவை), சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே. பாலபாரதி, கே. சாமுவேல்ராஜ், தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் எ. கோதண்டம் உள்ளிட்டோர் உரை யாற்றினர். இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: இந்தியாவின் மொத்த உழைப்பாளர்களின் பெரும்பகுதி மக்கள் பட்டியலின, பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களே. இம்மக்க ளை ஒன்றுசேர விடாமல் சாதிய மோதல்களை உருவாக்குவதும் இம்மக்களுக்குள் ஏற்படும் சிறு-சிறு பிரச்சனைகளை பெரும் கல வரங்களாக மாற்றும் பணியில் சாதிய சக்தி கள் முனைந்து வருகின்றன. இச்சக்திகளை தமிழகத்தில் பாஜக - ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் ஊக்கப்படுத்தி வருகின்றன.
கடந்த பல்லாண்டுகளாக கடைபிடிக்கப் பட்டு வரும் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளால் உழைப்பாளி மக்கள் வாழ்விழந்து தவித்து வருகின்றனர். ஒன்றிய பாஜக அரசின் பொருளாதாரக் கொள்கைகள் சிறு-குறு தொழில் முனைவோர், விவசாயிகள், அனைத்துப்பகுதி உழைப்பாளி மக்களையும் ஓட்டாண்டியாக்கியுள்ளது. விண்முட்டும் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவை களால் நாட்டு மக்கள் மூச்சுத் திணறி உள்ள னர். தங்களது வாழ்வாதாரத்திற்காக ஒன்றி ணைந்து போராட வேண்டிய மக்களை சாதி மற்றும் மதத்தை பயன்படுத்தி பிரித்தாளுவதின் மூலம் கார்ப்பரேட் பெருமுதலாளிகளை காப்பாற்றும் நோக்கோடு ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டங்களின் விளைவாக அருந்ததியர் உள்ஒதுக்கீடு கோரிக்கையை கலைஞர் தலைமையிலான அப்போதைய தமிழக அரசு ஏற்றுக் கொண்டு நிறைவேற்றியது, தமிழக அரசு தலித் கிறித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதும், அதுபோல கேரள அரசை தொடர்ந்து தமிழக அரசும் அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்கி பணி நியமன ஆணை வழங்கியதும் வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். இந்நிலையில் “யாதும் ஊரே யாவரும் கேளிர்”, “பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும்” என்ற உன்னத லட்சியங்களை முன்னெடுக்கும் வகையில் தமிழகத்தில் சாதிய ஒடுக்குமுறை ஒழித்திடுவோம்! சாதியற்ற சமத்துவ சமூகம் படைத்திடுவோம், தமிழகத்தை சமத்துவப்புர மாக மாற்றிட அனைவரும் கரம் கோர்த்து களமிறங்க வேண்டுமென இம்மாநாடு அறைகூவி அழைக்கிறது.
இத்தகைய அம்சங்களை கணக்கில் கொண்டு தலித் - பழங்குடி மக்களின் பலப்படுத்தும் நடவடிக்கைகளை ஒன்றிய மாநில அரசுகள் மேலும் தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் நிலவும் பல்வேறு விதமான தீண்டாமைக் கொடுமைகளை தடுத்திட வேண்டும். கோவில்களில் பட்டியலின மக்களை வழிபட அனுமதிப்பது, இடுகாடு களில் பிரேதங்களை அடக்கம் செய்ய அனு மதிப்பது, இரட்டை குவளை முறை உள்ளிட்ட அனைத்து வகையான தீண்டாமைக் கொடுமைகளுக்கும் முடிவு கட்டிட வேண்டும்.
சிறப்பு நீதிமன்றங்கள்
தீண்டாமைக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடைமுறையில் உள்ள 1989 வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை கறாராக அமல்படுத்த வேண்டும். இதற்கு உதவும் வகையில் சிறப்பு நீதிமன்றங்களை அமைத்திட வேண்டும். சாதி, ஆணவப் படுகொலைகள் மற்றும் குற்றங்களைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும். பஞ்சமி நிலங்கள் மற்றும் நிபந்தனை நிலங்களை மீட்டு தலித் மக்களிடம் ஒப்படைக்க வேண்டும். பல்வேறு வகையான புறம்போக்கு களில் வசித்து வரும் மக்களுக்கு மனை பட்டா வழங்குவதுடன், நில உச்சவரம்புச் சட்டத்தை முறையாக செயல்படுத்தி நிலமற்ற அனைத்துப் பிரிவு ஏழைகளுக்கும் நிலம் வழங்கிட வேண்டும். அனுபவத்தில் உள்ள விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். ஒன்றிய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். இட ஒதுக்கீட்டின்படி தலித் - பழங்குடி பிரிவினரைக் கொண்டு நிரப்ப வேண்டிய பின்னடைவு காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தனியார்துறை யிலும் இட ஒதுக்கீடு வழங்கிட சட்டம் இயற்ற வேண்டும். மக்கள் தொகை உயர்விற்கு ஏற்ப புதிய பணியிடங்கள் உருவாக்கப்படவேண்டும்.
உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை உறுதி செய்க!
இதேபோல உயர்கல்வி நிறுவனங்களில் சட்டப்படியான இடஒதுக்கீடு முறையாகவும், முழுமையாகவும் அமல்படுத்த வேண்டும். ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம்.களில் ஒவ்வொரு ஆண்டும் பட்டியலின, பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டுஇடங்களில் சுமார் 1000 இடங்கள் பறிக்கப்படு வதை தடுத்து நிறுத்தி இம்மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும். அகில இந்திய அளவிலும், ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில தலித் - பழங்குடி மக்கள் தொகைக்கேற்ப துணைத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கிட வேண்டும். இவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதி தலித் - பழங்குடியினர் மேம்பாட்டிற்கு மட்டுமே செலவிடப்பட வேண்டும். இதற்கென்று தனிச்சட்டம் இயற்றப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பை விரைந்து நிறைவேற்றிட வேண்டும்.
துப்புரவு தொழில் நவீனமயம்
கையால் மலம் அள்ளும் இழிவை அடியோடு ஒழித்திட வேண்டுமெனில் துப்புரவு துறை நவீனமயமாக்கப்பட வேண்டும். அதற்கு உலக நாடுகளில் உள்ளதைப்போல் உயர் கல்வியில் துப்புரவு பொறியியல் துறை உருவாக்கப்பட வேண்டும். தலித் கிறித்தவர்களை எஸ்.சி. பட்டியலில் இணைக்க வேண்டும். விவசாய கூலித் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச கூலிச் சட்டத்தில் கூலி அளவை 600 ரூபாயாக உயர்த்தி அவற்றை உறுதிபட அமல்படுத்த வேண்டும். கிராமப்புற வேலை உறுதிச் சட்டத்தை அனைத்து மாநிலங்களிலும் உறுதிபட அமல்படுத்த வேண்டும். அதற்கு தேவையான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கிட வேண்டும். சட்டப்படி ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 200 நாள் வேலை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். வேலை உறுதி திட்டத்தை நகர்புறத்திற்கு விரிவுப்படுத்த வேண்டும்.
வன உரிமைச் சட்டம் அமலாக்கல்
வன உரிமைச் சட்டம் 2006ஐ அமல்படுத்த முனைப்புடன் செயல்படுத்த வேண்டும். பல ஆண்டுகளாக பழங்குடி மக்கள் அனுபவித்து வரும் நிலங்களுக்கு உரிய பட்டா வழங்க வேண்டும். அந்நிலங்களிலிருந்து ஆக்கிரமிப்பாளர்கள் என்று அம்மக்களை வனத்துறையினர் வெளியேற்றுவதை ஒன்றிய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும். பழங்குடி மக்களுக்கு சாதிச் சான்றிதழ் தடையின்றியும், தாமதமில்லாமலும் வழங்கிட வேண்டும். ஈரோடு மாவட்ட மலையாளி, மலைப்புலையன், வேட்டைக்காரன், குறவன் இனத்தின் உட்பிரிவினர், குறுமன்ஸ் இனத்தின் உட்பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய மாநில அரசுகள் துரிதப்படுத்த வேண்டும். பாடத்தில் சேர்க்க... அறிவியலுக்கு விரோதமானது சாதி என்பதை பற்றி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இணைத்திட வேண்டும். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கப்படுவதற்கு நீதிமன்றங்களில் உள்ள தடைகளை நிவர்த்தி செய்ய மாநில அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதை ஒன்றிய, மாநில அரசுகள் உத்தரவாதப்படுத்த வேண்டுமென இம்மாநாடு கோருகிறது. மேலும் இந்தியாவில் சாதி, மத வேறு பாடின்றி மக்களிடையே ஒற்றுமையையும், இணக்கத்தையும் ஏற்படுத்தும் வகையில் சாதிய ஒடுக்குமுறைகளை மட்டுமல்ல, சாதி அமைப்பையும் ஒழித்துக்கட்டி சமூக சமத்துவத்தை நிலைநாட்டிட முனைந்தும், இணைந்தும் செயல்பட முன்வருமாறு அனைத்து ஜனநாயக இயக்கங்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டிக் கேட்டுக் கொள்கிறது. சமூக ஒடுக்குமுறைகளுக்கு முடிவு கட்டுவோம்!, சாதிய பாகுபாடுகளை கைவிடுவோம், தமிழகத்தை சமத்துவபுரமாக மாற்றுவோம் என்ற முழக்கத்துடன் 2023 ஜூன் மாதம் 4வது வாரத்தில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஒன்றியங்கள் மற்றும் நகரங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறும். இப்பிரச்சாரத்திற்கு அனைத்துப் பகுதி உழைக்கும் மக்களும் பேராதரவு வழங்க வேண்டும் என இம்மாநாடு வேண்டுகிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.