“ஜோத்பூர், மார்வாரின் அன்பு மற்றும் சகோதரத்துவத்தின் பாரம்பரியத்தை மதிக்கும் அதே வேளையில், அமைதியைப் பேணவும், சட்டம் ஒழுங்கை மீட்டெடுப்பதில் ஒத்துழைக்கவும் அனைத்து தரப்பினருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்”
- அசோக் கெலாட், ராஜஸ்தான் முதல்வர்
ஜோத்பூர், மே 3 - ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் முஸ்லிம்களை ரம்ஜான் பண்டிகை கொண்டாட விடாமல், சங்-பரிவார் கூட்டத்தி னர் வன்முறை வெறியாட்டம் நடத்தி யுள்ளனர். கல்வீச்சு, வாகனங்கள் தீக்கிரை, போலீஸ் தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு என ஜோத்பூரை கலவரக் காடாக மாற்றி யுள்ளனர். தற்போது அங்கு பெரும் எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதி, ராம நவமி ஊர்வலம் என்ற பெயரிலும், ஏப்ரல் 16-ஆம் தேதி அனுமன் ஜெயந்தி பெயரிலும், நாடு முழுவதும் முஸ்லிம் குடியிருப்புப் பகுதிகளைக் குறிவைத்து, சங்-பரிவாரங்கள் வன்முறை வெறி யாட்டத்தை அரங்கேற்றினர். மத்தியப் பிரதேசம், குஜராத், கோவா, ஜார்க்கண்ட், மேற்குவங்கம், தில்லி, கர்நாடகம் என நாடு முழுவதும் இந்த வன்முறைகள் தொடர்ந்தன. இதில் 2 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதில், ம.பி., குஜராத், கர்நாடகா ஆகிய பாஜக ஆளும் மாநிலங்களிலும், காவல்துறை நிர்வாகம் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் தில்லியிலும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீதே வழக்குகள் போடப்பட்டு, ஏராள மானோர் கைது செய்யப்பட்டனர். தில்லி ஜஹாங்கீர் புரியிலும், மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் மாவட்டம், தலாப் சவுக், கவுசாலா மார்க், தபாடி சவுக், சஞ்சய் நகர் மற்றும் மோட்டிபுரா பகுதிகளிலும், குஜராத்தின் ஆனந்த் மாவட்டம் கம்பாத் நகரிலும் ஏழை முஸ்லிம்களின் வீடுகள், கடைகள் புல்டோசர் மூலம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. இந்நிலையில், ரம்ஜான் பண்டிகை யொட்டி முஸ்லிம்கள் கொடியேற்று வதற்கும், ஒலிபெருக்கி அமைப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து, சங்-பரிவாரங்கள் ராஜஸ்தானில் மீண்டும் வன்முறையை அரங்கேற்றியுள்ளனர்.
ஜலோரி கேட்டில் இருந்த இந்து கொடியை அகற்றி முஸ்லிம் கொடியை கட்டியதாகவும், மேலும், விடுதலைப் போராட்ட வீரர் பால் முகுந்த் பிஸ்ஸாவின் சிலை மீது முஸ்லிம்கள் தங்களின் கொடி யை ஏற்றியதாகவும் கிளப்பி விட்ட சங்-பரிவாரங்கள், முஸ்லிம்கள் அமைத்திருந்த கொடி, பேனரை அகற்ற முயன்றுள்ளனர். இது ஒருகட்டத்தில் அவர்கள் எதிர்பார்த்தது போல கலவரமாக மாறியுள்ளது.
இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கற்களை வீசித்தாக்கிக் கொண்டதாகவும், வாகனங்களை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. போலீசாரை நோக்கியும் கற்கள் வீசப்பட்டுள்ளது. பாஜக எம்எல்ஏ சூர்யகாந்த வியாஸ் வசிக்கும் ஜலோரி கேட் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீவைத்து எரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த ராஜஸ்தான் ஆயுதப் படையினர் கண்ணீர் புகை குண்டுகள் வீசி கூட்டத்தை கலைத்துள்ளனர். நள்ளிரவில் ஆரம்பித்த இந்த கலவரம் செவ்வாய்க்கிழமை காலை வரை தொடர்ந்துள்ளது. இந்த மோதலை தடுக்க முயன்ற காவல் துறை ஆணையர் உள்பட 4 காவலர்கள் காய மடைந்துள்ளனர். மேலும், கலவரத்தில் ஈடுபட்டவர்களில் 10 பேர் காயமடைந்தனர். இதனிடையே ஜோத்பூர் எம்.பி.யும், ஒன்றிய பாஜக அமைச்சருமான கஜேந்திர சிங் செகாவத் தலைமையில் ஜோத்பூரில் கலவரம் நடந்த பகுதியில் திரண்ட பாஜக-வினர், முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி பதற்றத்தை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கினர். எனினும், பெரும் எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
ஜோத்பூர் சம்பவம் தொடர்பாக இணையதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படலாம் என்பதால், அசோக் கெலாட் தலைமையிலான மாநில காங்கிரஸ் அரசு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜோத்பூரில் இணைய சேவைகளை முடக்கியது. மேலும், ஜலோரி கேட் வன்முறை தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், “ஜோத்பூர் ஜலோரி கேட்டில் இரு பிரி வினருக்கு இடையே ஏற்பட்ட மோத லால் பதற்றம் ஏற்பட்டுள்ளது துரதிர்ஷ்ட வசமானது. எந்த விலை கொடுத்தும் அமைதி மற்றும் ஒழுங்கை பராமரிக்க நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.