tamilnadu

img

உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நேட்டோவை கலைக்க வேண்டும்

காத்மாண்டு, ஜூலை 27 - உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ‘நேட்டோ’ அமைப்பைக் கலைக்க வேண்டும் என்று உலக சமாதானக் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.  உலக சமாதான கழகத்தின்,  ஆசிய பசிபிக் பகுதி கூட்டம்,  நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில்  ஜூலை 26,  27 தேதிகளில் நடைபெற்றது. உலக சமாதான கழகத்தின், ஆசிய - பசிபிக் பகுதியின் தலைவர் ரபீந்திர அதிகாரி தலைமை தாங்கினார். இதில் 9 நாடுகளைச் சேர்ந்த 40 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.  முதல் நாளான ஜூலை 26 அன்று,  அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகத்தின் (All India Peace and Solidarity Organisation - AIPSO) சார்பில்,   ஆசிய - பசிபிக் பகுதியின் சமாதானத்தை பாதுகாப்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.  இப்பகுதியில் உள்ள நாடுகளின் மக்களுக்கிடையேயான தொடர்புகளை,  நட்புறவை வளர்க்க வேண்டும்,  சார்க் அமைப்பை வலுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.  உலக சமாதானக் கழகத்தின் தலைவர் பல்லப்சென் குப்தா பேசுகையில்,  நேட்டோ மற்றும் ரஷ்யாவிற்கு இடையே உக்ரைனில் நடைபெறும் போர், உலக சமாதானத்திற்கு மிகப் பெறும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அமெரிக்கா மற்றும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோவின் உலக மேலாதிக்க நோக்கங்களே இப்போருக்குக் காரணம்” என்றார்.  ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டு வரும் குழப்பங்கள்,  மனித உரிமைகள் மற்றும் பிரச்சனைகள் குறித்தும்,  கூட்டத்தில் கவலை தெரிவிக்கப்பட்டது. ஜனநாயகத்திற்காகப் போராடும் மியான்மர் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. 

நேட்டோவை கலைத்திடுக 

கிரேக்கத்தைச் சேர்ந்த,  உலக சமாதானக் கழகத்தின் நிர்வாகச் செயலாளர் இராக்கிஸ்,  பாலஸ்தீன விடுதலைக்காகப் போராடும்,  பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவை தெரிவித்தார். நேட்டோவை கலைக்க வேண்டும். அது உலக சமாதானத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. ரஷ்ய- உக்ரைன் போர் தற்பொழுது,  ”உக்ரைன் மண்ணில் நடைபெறும்,  நேட்டோ - ரஷ்யப் போராக” மாறிவருகிறது என்றார்.  இரவு விருந்தளித்து, பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றிய,  நேபாள நாடாளுமன்றத்தின் தலைவர் கணேஷ் பிரசாத் திமில்சினா,  நேபாளம் அண்டை நாடுகளுடன் நல்லுறவை விரும்புகிறது என்றார். 

சமாதானத்திற்காக உலக மக்களை திரட்டுவோம்

இரண்டாம் நாளான ஜூலை 27 அன்று நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி  பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றுகையில்,  உலக சமாதானம் மனித குல முன்னேற்றத்திற்கு அவசியம். வறுமை, வேலையின்மை, மருத்துவ வசதிகள், கல்வி வாய்ப்புகள் கிட்டாமை நிலவும் சூழலில், பேரழிவு ஆயுதங்களை உற்பத்தி செய்து குவிப்பது மனித குலத்திற்கு எதிரானது. உலக சமாதானக் கழகம்,  சமூக நீதிக்காகவும்,  அனைவரின் வளர்ச்சிக்காகவும்,  சமத்துவத்திற்காகவும்,  உலக சமாதானத்திற்காகவும் அனைத்து நாடுகளின் மக்களையும் அணி திரட்ட வேண்டும் என்றார். இக்கூட்டத்தில் வியட்நாம், பாகிஸ்தான், கொரிய மக்கள் குடியரசு, கிரேக்கம்,  இந்தியா நேபாளம், வங்கதேசம்,  இலங்கை, லாவோஸ் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.  அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர்கள் டாக்டர் ஜி. ஆர். இரவீந்திரநாத்,  ஐ. ஆறுமுக நயினார்,  தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் டாக்டர் ஏ. ஆர் .சாந்தி, மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் பேபி சகிலா ஆகியோர் கலந்து கொண்டனர்.  அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தாக்குதல்களுக்கு,  அடக்குமுறைகளுக்கு எதிராக போராடிவரும் கியூபா,  இராக் ,  ஜனநாயக மக்கள் கொரிய குடியரசு மக்களுக்கு இக்கூட்டத்தில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது.