tamilnadu

img

செயற்கை வெளிச்சம் அழிக்கும் கடல்வாழ் உயிரினங்கள்

1.9 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள கடலோரப் பிரதேசங்களின் வாழிடச்சூழலை மனிதன் உருவாக்கிய செயற்கை வெளிச்சம் மோசமாகப் பாதிக்கிறது என்று சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வுகள் கூறுகின்றன. ப்ளைமவுத் பல்கலைக்கழகம், ப்ளைமவுத் கடல்சார் ஆய்வுக்கூடம், நார்வே ஆர்க்டிக் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வுகள் இதைக் கண்டறிந்துள்ளன. செயற்கை வெளிச்சம் மனிதர்களின் உடல் நலம், நிலப்பகுதியின் சூழலை பாதிப்பது தொடர்பாக சந்தேகங்கள் முன்பே ஏற்பட்டன. ஆனால் இப்போது சயிண்டிபிக் அமெரிக்கன் இதழில் வெளியிடப்பட்டுள்ள இக்கட்டுரையின் விவரங்கள்படி இத்தகைய செயற்கை வெளிச்சங்கள் கடல்வாழ் உயிரினங்களையும் பாதிக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெளிச்சக்கடலில் மூழ்கி உயிரிழக்கும் உயிரினங்கள்

கட்டடங்கள், படகுகள் போன்ற இடங்களில் இருந்து வரும் வெளிச்சம் உள்கடலிலும் மிக வேகமாகப் பரவுகிறது. இது இயற்கை வாழிடச் சூழலிற்கு தடையாக அமைகிறது. 1.9 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள கடலோரப்பகுதிகளில் மனிதன் உருவாக்கிய செயற்கை வெளிச்சம் ஏறக்குறைய ஒரு மீட்டர் ஆழம் வரை உயிரினங்களைப் பாதிக்கிறது. கடலோர நகரங்களின் சமீபத்தில் உள்ள 75% கடலும் வெளிச்ச மாசிற்கு இரையாகியுள்ளது.

இருள் வாழ்க்கை

கடல்வாழ் உயிரினங்களில் பெரும்பாலானவை நிலா வெளிச்சத்தில்தான் உணவு தேடுகின்றன. செயற்கை வெளிச்சம் உணவு கிடைக்கும் அளவைக் குறைக்கிறது. உணவு தேட மட்டும் அல்ல எதிரியிடம் இருந்து தப்பிப் பிழைக்க, இனப்பெருக்கம், தூக்கம் ஆகியவற்றிற்கும் கடல்வாழ் உயிரினங்கள் இயற்கை வெளிச்சத்தையே நம்பி வாழ்கின்றன. ஆனால் செயற்கை வெளிச்சம் இதற்கு தடையாக அமைகிறது. வெளிச்சம் இந்த உயிரினங்களின் இயல்பான வாழ்வை தாறுமாறாக்குகிறது. அதிகமாக வரும் வெளிச்சம் அதிக வெப்பத்தை உருவாக்குகிறது. இது காலநிலை மாற்றத்திற்கும் காரணமாகிறது. இந்த மாசு தடாகங்கள், கடல்களில் வாழும் விலங்கு மிதவை உயிரினங்களை (Zoo plangtons) வாழ இயலாமல் செய்கிறது. இது கடல்நீரில் பாசிகள் பெருகக் காரணமாகிறது. இதனால் நீரின் தரம் குறைகிறது. இத்தகைய வெளிச்சங்கள் கடல்வாழ் தாவர மிதவை உயிரினங்களுக்கும் அச்சுறுத்தலை ஏர்படுத்தியுள்ளது. மனிதன் ஏற்படுத்தும் சூழல் சீர்கேடுகள் அண்டவெளியிலும் ஆழ்கடலிலும் தொடர்கதையாகிறது. செயற்கை வெளிச்சம் வலசைப் பறவைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது போல இப்போது அதே வெளிச்சம் கடல்வாழ் உயிரினங்கலையும் வாழவிடாமல் செய்கிறது. சுயநலத்துடன் மனிதன் செய்யும் இத்தகைய சூழல் குறுக்கீடுகளால் அவன் தானும் நிம்மதியிழந்து மற்ற உயிரினங்களையும் நிம்மதியுடன் வாழவிடாமல் செய்துகொண்டிருக்கிறான். அழியும் பூமியில் மனிதன் சூழலை அழிக்கும் வேலையைத் தொடர்ந்தால் நாளை பேர் சொல்ல ஒரு உயிரினமும் இங்கு மிஞ்சாது.