tamilnadu

img

தமிழ்ப்பெயரே சூட்டுங்கள்!

வைகை இலக்கிய விழாவில் வேண்டுகோள்

மதுரை, மார்ச் 28-   ஒவ்வொரு தமிழரும் திருக்குறளின் பிரதியாக மாறவேண்டும் என வைகை இலக்கியத்திருவிழாவில்  கவிஞர் வைரமுத்து கூறினார். மதுரை உலக தமிழ்ச் சங்க கூட்டரங்கில், பள்ளி கல்வித்துறை, நூலகத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து ‘‘வைகை இலக்கியத் திருவிழா 2023’’ நடைபெற்றது.  இரண்டாம் நாள் நிகழ்விற்கு மாவட்ட ஆட்சியர் மரு. எஸ்.அனிஸ் சேகர் முன்னிலை வகித்தார். கவிப்பேரரசு வைரமுத்து, பேராசிரியர் அருணன் உள்ளிட்டோர் உரையாற்றினர். கூடுதல் ஆட்சியர் மாவட்ட முகமை திட்ட அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் எடுப்பு) ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  விழாவில், கவிஞர் வைரமுத்து பேசுகையில், ‘‘தமிழ்நாட்டின் தொன்மை நகர் மதுரை. பரிபாடல் பாடப்பட்ட ஊர். இலக்கியங்கள் தெரிந்திருந்தால் மட்டுமே மதுரையில் நாம் வாழ தகுதி படைத்தவர்கள்.

 3 ஆயிரம் ஆண்டு மூத்த மொழியான தமிழ். இது செழித்த மொழி, பண்பாடு, வரலாறுகளைச் சுமந்த மொழி. திருவள்ளுவர், கம்பன், பாரதியை பெற்றெடுத்த மொழி.  கடைசித் தமிழன் இருக்கும் வரை தமிழ் இருக்கும் என்பதைவிட தமிழ் மொழி இருக்கும் வரையிலும் தமிழன் இருப்பான்.   பிராமணர்கள் ஒரு சூழ்ச்சி செய்தார்கள்; வேதங்களை எழுதி வைத்தால் காணாமல் போகக்கூடும் என்று, ஒவ்வொரு பிராமணரையும் மனனம் செய்து கொள்ள வைத்தார்கள். அதன்வழியாக ஒவ்வொருவரும் வேதத்தின் பிரதியாகவே ஆனார்கள். இது ஒரு நல்ல சூழ்ச்சி. நாமும் இந்த சூழ்ச்சியை பின்பற்ற வேண்டும்.  ஒவ்வொரு தமிழரும் திருக்குறள், திருமூலரின் பிரதியாக மாறவேண்டும். ஒவ்வொருவரும் தமிழை இந்த மண்ணில் பரப்பவேண்டும். உங்களது பிள்ளைகளுக்கு தமிழ்ப் பெயர் சூட்டுவதில் ஆர்வம் காட்டுங்கள். பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுங்கள்’’ என்றார்.

பேராசிரியர் அருணன் 

மூத்த எழுத்தாளர் பேரா. அருணன் பேசுகையில், “பி.ஏ., எம்.ஏ., தமிழ் படித்தால் வேலை வாய்ப்பு இல்லை என்று சொல்கிறார்கள். இனிமேல் தமிழில் படித்தால் தான் வேலை வாய்ப்பு என்பதையும் தமிழ்நாடு அரசு வரும் காலங்களில் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் தமிழ் இலக்கியங்களை நம்முடைய குழந்தைகள் படிப்பார்கள். ஆதிசங்கரர் மாயாவாதம் பேசிக்கொண்டிருந்தார். அதையே பாரதி ஒரு பாடலில் நீங்கள் எல்லாம் அற்ப மாயைகளோ என்று பாடினார். இந்த உலகம் அனைவருக்கும் பொதுவானது. இதில் யார் மேலானவர் யார் கீழானவர் என்பது இல்லை. பகிர்ந்துண்டு வாழ் என்பதுதான் கம்யூனிசம்.  அந்த வகையில் இந்த உலகத்தில் மிகப்பெரிய செல்வம் எது என்றால் கல்விதான். வீடு, நிலம், பொருள் அனைத்தையும் உன்னிடம் இருந்து ஒருவர் பறித்துக் கொள்ளலாம். ஆனால், நீ பெற்ற கல்வியை மட்டும் யாரும் பறித்துக் கொள்ள முடியாது. எனவே தான் இந்த உலகத்தில் மிகவும் சிறந்த செல்வம் கல்வி. அப்படி கல்வியின் மூலம் தான் நாம் தமிழை இந்த உலகிற்கு கொண்டு செல்ல முடியும்’’ என்றார்.