சென்னை,ஏப்.20- சென்னை அருகே கிளாம் பாக்கம், குத்தம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையங்கள் வருகிற அக்டோபர், செப்டம்பர் மாதங்களில் முறையே திறக்கப்படும் என்று சட்டப் பேரவையில் அமைச்சர் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதனன்று (ஏப்.20) வீட்டுவசதி துறை கொள்கை விளக்க குறிப்பை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் முத்துசாமி,“ தற்போதுள்ள சென்னை பெருநகர பேருந்து முனையத்தில் நெரிசலை குறைக்கும் வகையில் கிளாம்பாக்கம் மற்றும் குத்தம்பாக்கத்தில் மேலும் 2 புதிய பேருந்து முனையங்கள் அமைக்க முன்மொழியப்பட்டது. இந்த 2 பேருந்து முனையங்கள் கட்டும் பணி நடை பெற்று வருகின்றது. கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் புதிய புறநகர் பேருந்து முனையம் கட்டி முடிக்கப்பட்டு, தெற்கு நோக்கி செல்லும் பேருந்து வழித் தடங்கள் 2022ஆம் ஆண்டு முதல் இயக்கப்படும். அதேபோல், மேற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காக குத்தம் பாக்கத்தில் ரூ.336 கோடி செலவில் ஒரு புதிய புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து முனையத்தின் கட்டுமான பணிகள் கட்டி முடிக்கப்பட்டு வரும் அக்டோபர் 2022 ஆம் ஆண்டு பயன் பாட்டிற்கு வரும்” என்றார்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலை யத்திலுள்ள 15 ஏக்கரிலும் போரூரிலுள்ள 21 ஏக்கரிலும் திறந்தவெளி ஒதுக்கீடு நிலங்களில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் ரூ. 30 கோடியில் உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். மாமல்லபுரத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக, அனைத்து தொடர்புடைய பிரச்சனைகளுக்கும் ஆலோசனை சேவைகள் உட்பட விரிவான சாத்தியக் கூறு அறிக்கையை வழங்குவதற்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளது எனவும் கூறினார். மானியக்கோரிக்கைகள் மீது நடந்த விவாதங்களுக்கு பிறகு புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர், “திருமழிசை, மீஞ்சூர், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நகரங்களுக்கு ‘புது நகர் வளர்ச்சித் திட்டம்’ சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தால் தயாரிக்கப்படும். மதுரையிலுள்ள தோப்பூர் உச்சப்பட்டி துணை நகரத்திற்கு புது நகர் வளர்ச்சித் திட்டம் தயாரிக்கப்படும்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் திருமழிசை திட்டப்பகுதியில் 16.92 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.1280 கோடி மதிப்பீட்டில், பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகம் கட்டப்படும். 7. 60 இடங்களில், பழுதடைந்த நிலையில் உள்ள சுமார் 10,000 தமிழ்நாடு அரசு ஊழியர் வாடகைக் குடியிருப்புகள் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் மறுகட்டுமானம் செய்யப்படும்” என்றார். வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைப்படுத்துதல் சட்டம் 2017,நிறைவேற்றப்பட உள்ள தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்போர் உரிமைச்சட்டம் ஆகிய சட்டங்களை செயல்படுத்தும் ஒழுங்குமுறை அதிகாரம் பெற்ற வீட்டுவசதி இயக்ககம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, இத்துறையில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்களைக் கொண்டே செயல்படுத்தப்படும். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் திருமழிசை திட்டப்பகுதியில், பொது மற்றும் தனியார் பங்களிப்பு முறையில் 16.92 ஏக்கர் நிலப் பரப்பில் ரூ.1280 கோடி மதிப்பீட்டில் ஒருங்கி ணைந்த குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகம் கட்டப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.