பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் நடைப்பயணம் பிரச்சாரம் பாஜகவுக்கு இறுதி யாத்திரை என ஏற்கனவே கூறினேன். அது நடந்து வருகிறது. அதிமுக, பாஜக கூட்டணியை முறித்து உள்ளது. அண்ணாமலை பிரச்சாரத்தில் கண்டதையும் உளறிக்கொண்டு திரிகிறார். இங்கு கோவையில் பேசும்போது, கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினரால் கோவைக்கு எந்த வளர்ச்சியும் இல்லை என கூறியுள்ளார். தேர்தலில் மக்களை சந்தித்து வாக்கு கேட்டு வெற்றி பெற்றவர் பி.ஆர்.நடராஜன். ஒருமுறை அல்ல, இரண்டு முறை அவர் நாடாளுமன்ற உறுப்பினராகி உள்ளார். அண்ணாமலை ஒரு முறைகூட தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறாதவர். மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில், கோவை தொழில்கள் மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்து தொழில்கள், விவசாயம் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. சிறு,குறு தொழில்களுக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பு அறவே கூடாது என குரல் கொடுத்து போராடியவர் மார்க்சிஸ்ட் கட்சியின் எம்பி, பி.ஆர்.நடராஜன் என்பது தெரியாமல் அண்ணாமலை உளறுகிறார்.
பாஜக கொள்கை காரணமாக சிறு, குறு தொழில் அழிந்து வருகின்றன. இதற்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு கொள்கை தான் காரணம். பஞ்சு விலை உயர்த்தப்பட்டுள்ளது. பருத்தியை அம்பானி, அதானிக்கு விற்று வருகின்றனர். அவர்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால் இங்கு பற்றாக்குறை ஏற்படுகிறது. கடந்த தேர்தலில், கோவை, மதுரையில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றோம். மீண்டும் கோவை, மதுரையைப் பெற்று இங்கு போட்டியிடுவோம் என அண்ணாமலைக்கு தெரிவித்து கொள்கிறேன்.
அகில இந்திய கட்சியான பாஜக தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என கர்நாடகத்தில் பந்த் அறிவித்து போராட்டம் நடத்துகிறார்கள். பாஜக அரசியல் ஆதாயத்திற்காக தமிழகத்திற்கு விரோதமாக செயல்படுகிறார்கள். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தக் கூடாது என ஒரு கட்சி போராடுவது நியாயம் இல்லை. பாஜக பந்த்திற்கு கர்நாடக அரசு பணிவது ஏற்றுக் கொள்ள முடியாது. காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி டெல்டா மாவட்டங்களில் பந்த் நடத்துவது குறித்து விவசாய சங்கங்கள் பேசிக்கொண்டிருக்கின்றன. உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், போராடித்தான் உரிமையை பெற வேண்டும் என்கிற நிலை ஏற்படுத்தப்படுகிறது. எதற்கு ஒன்றிய அரசு இருக்கிறது என்றே தெரியவில்லை.