சென்னை, ஜூன் 19 - அண்மையாக பாமகவில் ராமதாஸுக்கும், அன்புமணி ராமதாஸுக்கும் இடையேஏற்பட்டு வரும் அதிகார மோதல்கள் தீவிரமடைந்துள்ளது. பல தரப்பில் இருந்தும் ஏற்பாடு செய்யப்பட்ட சமாதான பேச்சு தோல்வியில் முடிவடைந்தது. இந்நிலையில், அன்புமணி மாவட்ட வாரியாக பொதுக்குழு கூட்டங்களை நடத்தி வருகிறார். ஜூன் 19 அன்று சேலம் மாவட்ட பொதுக்குழுவை கூட்டியிருந்தார். இந்நிலையில், ராமதாஸின் தீவிர ஆதரவாளர்களான - பாமகவின் கவுரவத் தலைவர் கோ.க. மணி எம்எல்ஏ அப்போலோ மருத்துவமனையிலும், மூத்த தலைவரான அருள் எம்எல்ஏ சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்ந்தனர். இருவருமே நெஞ்சுவலி காரணமாக சிகிச்சையில் இருப்பதாகக் கூறி, புகைப்படங்களையும் வெளியிட்டனர். இந்நிலையில், வியாழனன்று சேலம் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி, “உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள நமது கட்சியின் 2 எம்எல்ஏ-க்களுக்காக பிரார்த்தனை செய்வோம். சிகிச்சை பெறும் அவர்கள் இருவரும் விரைவில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பூரணமாக குணமடைய வேண்டும்” என கிண்டலடித்துள்ளார்.