தமிழை நேசிப்பவர்கள் அனைவரும் தமிழர்களே! நூல் வெளியீட்டு விழாவில் வெ. இறையன்பு பேச்சு
தஞ்சாவூர், ஜுன் 1- தமிழை நேசிப்பவர்கள், பிழை யின்றி பேசுபவர்கள், தடையின்றி எழுதுபவர்கள் அனைவரும் தமிழர்களே என ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும், எழுத்தாளரு மான வெ. இறையன்பு தெரிவித்தார். தஞ்சாவூர் நல்லூர் முற்றம் சார்பில், சனிக்கிழமை நடைபெற்ற இறையன்புவின் `ஓராண்டு உரைகள்’ என்கிற நான்கு தொகுப்புகளின் நூல் அறிமுக விழா நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது: தமிழை நேசிப்பவர்கள், பிழையின்றி பேசுபவர்கள், தடையின்றி எழுதுபவர்கள் யாரோ, அவர்களே தமிழர்கள். தன்னுடைய பிறந்த மாநிலத்தை விட தமிழ்நாட்டை அதிகம் நேசிப்பவர்கள் தமிழர்கள். தமிழ் மொழியைப் பற்றிப் பேசினால், ரத்தம் கொதித்தெழுகிறார்களோ, அவர்களெல்லாம் தமிழர்கள். தமிழ் மொழியின் வளத்துக்கும், நலத்துக்கும் பங்களிப்பு செய்பவர்கள் தமிழர்கள். தமிழகத்தில் சம்பாதித்ததைத் தங்களது மாநிலத்தில் முதலீடு செய்யாமல், தமிழகத்திலேயே முதலீடு செய்பவர்கள் தமிழர்கள். ஆனால், இன்றைய தமிழர்கள் இலக்கிய ஆர்வத்துடன் இருக்கின்ற னரா என்பது கேள்விக்குறி. இப்போது பலர் படிப்பதோ, வாசிப்பதோ இல்லை; நூல்களின் புழக்கமும் குறைந்து வருகிறது. சிலர் மட்டுமே தமிழை விரும்பிப் படிக்கும் காலத்தில் வாழ்கிறோம். எனவே, நாளைய தமிழர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது நம்முடைய சிந்தனையாக இருக்கிறது. தமிழர்கள் அறிவிலும், ஆற்றலிலும், திறமையிலும், திண்மையிலும் தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு இருந்தால் நாளைய தமிழர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பகுத்தறிவான சமூகம் உருவானால்தான் எதிர்காலத் தமிழகத்துக்கு நல்லது. இன்றைய தமிழர்களை விட நாளைய தமிழர்கள் எல்லா பரிமாணங்களிலும் மேம்பட்டிருக்க வேண்டும். மேதினி அவர்களைப் பாராட்ட வேண்டும்” என்றார். இவ்விழாவுக்கு புலவர் இரெ. சண்முகவடிவேல் தலைமை வகித்தார். பேராசிரியர் இரா. காமராசு, எழுத்தாளர் அகிலா கிருஷ்ணமூர்த்தி, மருத்துவர்கள் சு. அமுதவடிவு, ச. மருது துரை ஆகியோர் நூல் அறிமுகவுரை யாற்றினர். முன்னதாக, எழுத்தாளர் செ. சண்முகசுந்தரம் வரவேற்றார். அ. கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை சுப்ரா. க. நடராசன் தொகுத்து வழங்கினார்.