ஈரோடு, பிப். 12- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில், அதிமுக தொண்டர்கள் பாஜகவினரை கண்டு கொள்ளவே இல்லை என்றாலும், அதனை மீறி சிலர் பிரச்சாரத்தில் பங்கேற்றவர்களிடமும், பாஸ் மோடி படம், கொடி எல்லாம் வேண்டாம் பாஸ், எங்களோடு சும்மா வந்தா போதும் என வெளிப்படையாகவே பேசுவது, பாஜகவினரை நொந்து கொள்ளச்செய்துள்ளது. அதிமுக சார்பில் தென்னரசு பொதுமக் களை சந்தித்து வாக்குகளை சேகரித்து வரு கிறார். அதிமுகவில் உள்ள உச்சகட்ட குழப்பம் தொண்டர்களை திசையற்று தவிக்கவிட்டுள்ளது. இரட்டை இலைக்கு பாதகமாக நாங்கள் இருக்க மாட்டோம் என்று சூளுரைத்து வேட்பாளரை திரும்ப பெற்ற ஓபிஎஸ் அணியினர், ஈரோடு கிழக்கு தொகுதி மக்களிடம் டாட்டா காட்டிவிட்டு மூட்டை முடிச்சுகளோடு பஸ் ஏறி சென்றுவிட்டனர். இந்நிலையில், தனித்து விடப் பட்டதைப் போல அதிமுகவினர் தற்போது வாக்கு களை சேகரித்து வருவதுதான் பரிதாபம். இந்நிலையில், ஈரோடு கிழக்கு தேர்தலில் கட்டாயம் வெற்றி பெற முடியாது, ஆனால் தங்களுடைய வாக்கு வங்கியை ஓரள வுக்கேனும் நிரூபிக்க வேண்டிய தேவை உள்ளதால், வாக்கு சேகரிப்பில் பாஜகவினர் கூடவே வந்தால், உள்ளதும் போகும் நிலை உருவாகும் என்கிற அச்சத்தோடு அதிமுகவினர் இருப்பது தெரியவருகிறது.
இதுகுறித்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட அதிமுக, பாஜகவினரிடம் பேச்சுக் கொடுத்தபோது, “அதிமுக கூட்டணியில், பாரதிய ஜனதா கட்சி அங்கம் வகித்தாலும், பெரிதாக அப்படி ஒரு தோற்றம் இருப்பது போல் தெரியாத சூழலே உள்ளது. அதிமுகவினர் எங்களை பிரச்சாரத்திற்கு அழைத்துச் செல்வதில்லை. அப்படியே சென்றாலும் பாஜக கொடி மற்றும் கட்சித் துண்டை பயன்படுத்தக் கூடாது என்கின்றனர். இது எங்களுக்கு மிகப்பெரிய அளவில் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. தொடர்ச்சியாக நாங்களாகவே தான் அதிமுகவினர் ஓட்டு கேட்க செல்லும் போதெல்லாம் கூடவே செல்கிறோம். முறையான அறிவிப்பும், அழைப்பும் வருவதில்லை. தேசிய கட்சியாக பாரதிய ஜனதா கட்சி இருந்தாலும் தேர்தல் பிரச்சாரத்திற்கு கூட பாரதிய ஜனதா கட்சியில் இருந்து ஆட்களை அழைத்துச் செல்ல முடியாத நிலை தான் உள்ளது. ஏன் முறையான அழைப்பு வருவ தில்லை என நாங்கள் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட நிர்வாகிகளிடம் கேட்டால், எங்களுக்கே முறையான அழைப்பு வருவதில்லை. அதனால்தான் உங்களிடமும் ஏதும் கூறுவதில்லை எனக் கூறுகின்றனர். வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் எங்கே எங்களை அழைத்துச் சென்றால் இரட்டை இலைக்கு விழும் ஓட்டுகளும் விழாமல் போய்விடுமா என அச்சத்தில், பாஸ் மோடி படம், கொடி எல்லாம் வேண்டாம் பாஸ், எங்களோடு சும்மா வந்தா போதும் என்கின்ற னர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக, பாரதிய ஜனதா கட்சியில் உள்ள முக்கிய பொறுப்பாளர்கள் பலர் திமுகவில் இணைந்து விட்டனர். இதனால் வெறுப்புற்று, வேறு வழியின்றி, கடமைக்கு ஏனோ தானோ என்று நாங்களும் தேர்தல் பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக” தெரிவித்தனர். அதிமுகவினர் கூறுகையில், இரட்டை இலைக்கு வாக்கு கேட்க செல்லும் பொழுது பாரதிய ஜனதா கட்சி கொடி பயன்படுத்தப்படு வதில்லை என்பது உண்மைதான். தமிழ்நாட்டின் மனநிலை அப்படி இருக்கிறது. ஆகவே தவிர்க்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்த தேர்தல் எங்களுக்கு வாழ்வா சாவா போராட்டம். எல்லாம் சீக்கிரம் சரியாகிவிடும் என்றனர்.
- பிரபாகரன்