tamilnadu

வெற்று வாய் ஜாலம் - அதிமுக தேர்தல் அறிக்கை

மக்களவைத் தேர்தலையொட்டி அதிமுக வெளி யிட்டுள்ள தேர்தல் அறிக்கை, பொய்களின் மூட்டையாக உள்ளது என்றால் மிகையல்ல.  கடந்த பத்தாண்டு காலமாக மாநில  உரிமைகளில் அத்துமீறி, அராஜகமாக மூக்கை நுழைக்கும் ஒன்றிய பாஜக அரசு, மாநிலங்களின் அதிகாரங்கள் அனைத்தையும் படிப்படியாக பறித்து மாநில சுயாட்சியை நசுக்கிப் பிழிந்து வரும் வேளையில், மாநில சுயாட்சி மற்றும் மாநில உறவுகள் குறித்து அதிமுக தேர்தல் அறிக்கையில் ஒரு வரி கூட இடம்பெறவில்லை.

தாய் மொழிக்கும் வேட்டு!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஒன்றிய அரசு அலுவலகங்களிலும் தமிழை  இணை ஆட்சி மொழியை கொண்டு வர வேண்டும் என்றால் அரசிய லமைச் சட்டத்தின் 343 ஆவது பிரிவில் உரிய திருத்தம் கொண்டு வரவேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கையை கிடப்பில் போட்ட மோடி அரசு, இந்தியை திணிக்க அனைத்து வழிகளிலும் வரிந்து கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்தித் திணிப்புக்கு எதி ராக எதுவும் இல்லை அதிமுக தேர்தல் அறிக்கையில்.

கனவை சிதைக்கும் கயமை

தமிழ்நாட்டு மக்களின் 150 ஆண்டு கால கனவுத் திட்டம் ‘சேது சமுத்திரம்’. நீண்ட கால போராட்டத்திற்குப் பிறகு செயல் வடிவம் பெற்றது. பெரும் பகுதி பணிகள் முடிவடைந்த நிலையில், வரலாற்றை திருப்பும் பிற்போக்கு சக்திகள் முடக்கி வைத்திருப்பதை அதிமுக தேர்தல் அறிக்கை அடியோடு மறைத்துவிட்டது!

காஷ்மீர் ரோஜா!

காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்தை நீக்க வேண்டும் என்பது ஆர்எஸ்எஸ்-சின் ரகசிய திட்டங்களில் ஒன்று. பெரும்பான்மை இல்லை என்பதால் வாலைச் சுருட்டிக்கொண்டு இருந்த பாஜக, அசுர பலம் கிடைத்ததும் 370 வது பிரிவை ரத்து செய்தது. ஜம்மு, காஷ்மீர் என இரண்டாக பிளவு படுத்தி அதிகாரங்கள் அனைத்தையும் தனது கைக்குள் கொண்டு வந்தது பற்றியும் அதிமுக வாய் திறக்கவில்லை.

‘கோயபல்ஸ்கள்’!

எதிர்க்கட்சிகளை தேடித்தேடி கைது செய்யும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஊழலின் ஊற்றுக் கண்ணான பாஜகவை சார்ந்தவர்களிடம் நெருங்கியது கூட இல்லை. ஊழலில் பாஜகவும் அதிமுகவும் ‘ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’ என்பதால் பாஜகவின் ஊழல்களை அதிமுக விமர்சிக்க மறுக்கிறது. தேர்தல் அறிக்கையில் இதுபற்றி ஏதும் இல்லை.

வெண்ணையும் சுண்ணாம்பும்

ஒரே மாதத்தில் தமிழகத்திற்கு எட்டு முறை மோடி படையெடுத்ததை பெருமை பீற்றி கொள்கிறார்கள் பாஜகவினர். ஆனால், மிக்ஜாம் புயல், பெருமழை சேதத்தால் தமிழக மக்கள் அல்லல்பட்ட போது, மோடி வராதது ஏன் என்பதற்கு பாஜகவும் பதில் சொல்லவில்லை. அதிமுகவும் கேள்வி கேட்கவில்லை. அதுமட்டுமல்ல, வெள்ள சேதங்களை சரி செய்ய  ரூ.37 ஆயிரம் கோடி  நிவாரணம் கேட்கும் தமிழ்நாட்டுக்கு ஒரு பைசா கூட வழங்காத பிரதமர் மோடி,  பாஜக ஆளும் மாநிலங்கள் குஜராத், உத்தரகாண்ட் மாநிலங்களுக்கு உடனுக்குடன் நிதியை வாரி கொடுப்ப தைத் தட்டிக் கேட்கும் தைரியம் அதிமுகவுக்கு இல்லை. தேர்தல் அறிக்கையில் அது பிரதிபலிக்கவில்லை. இவை மட்டுமல்ல; தொழிலாளர், விவசாயிகளின், பிரச்சனைகள், புதிய கல்விக் கொள்கை, குடியுரிமைத் திருத்தச் சட்டம் உள்ளிட்ட பல முக்கியப் பிரச்சனைகளில் பாஜக அரசின் செயல்பாடுகளுக்கு மாற்றாக, நாங்கள் இதைச் செய்வோம் என எதையும் முன் வைக்கவில்லை அதிமுக தேர்தல் அறிக்கை.மொத்தத்தில் வெற்று வாய் ஜாலம்!

- சி.ஸ்ரீராமுலு