நூறு நாட்களுக்கும் வேலை வழங்க வேண்டும்
விவசாயத் தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம்
திருச்சிராப்பள்ளி, ஜுன் 16- திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் வட்டம், வைரி செட்டிப்பாளையம் ஊராட்சியில் நூறு நாள் அட்டை வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் தொடர்ச்சியாக நூறு நாள்முடியும் வரை வேலை வழங்க வேண்டும். பெருமாள் கோவில் முதல் ஏரிக்காடு வரை தெருவிளக்கு அமைக்க வேண்டும். சமத்துவபுரம் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் வைரிசெட்டிப்பாளையம் கிளை சார்பில் சனிக்கிழமை ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்திற்கு, ஒன்றிய தலைவர் இரா. முத்துக்குமார் மற்றும் ஒன்றியச் செயலாளர் கணேசன், ஒருங்கிணைப்பாளர் டி. முத்துக்குமார், ஒன்றியப் பொருளாளர் மங்கள்ராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். இதனைத் தொடர்ந்து உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், துறையூர் வட்டாட்சியர், உப்பிலியபுரம் மண்டல துணை வட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில், வைரிசெட்டிப்பாளையம் ஊராட்சியில் தற்போது தினசரி நூறு நபர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நூறு நாள் வேலையானது எண்ணிக்கை உயர்த்தப்பட்டு இனிவரும் நாட்களில் சுழற்சி முறையில் 225 நபர்களுக்கு தொடர்ச்சியாக வழங்கப்படும். பெருமாள் கோவில் முதல் ஏரிக்காடு பகுதி வரை மின்வாரிய துறையின் மூலம் மதிப்பீடு பெற்று மாவட்ட ஆட்சியருக்கு கருத்துரு அனுப்பப்பட்டு நிர்வாக அனுமதி பெற்றவுடன் பணி மேற்கொள்ளப்படும். பட்டா வழங்குவது தொடர்பாக, தகுதியின் அடிப்படையில் பரிசீலித்து உரிய நபர்களுக்கு பட்டா வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.