tamilnadu

img

தமிழ்நாட்டில் சாகசச் சுற்றுலா மையங்கள்: அமைச்சர் தகவல்

சென்னை,ஜன.16- கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு சர்வதேச பலூன் திருவிழாவில் மாமல்லபுரம் கடற்கரை கோயில் புகைப்படம் பொறிக்கப்பட்ட தமிழ்நாடு சுற்றுலாத்துறை பலூனில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பயணம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர், “தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறை இந்தியாவிலேயே முன்னணியில் உள்ளது. மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தியதின் காரணமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் நாட்டிலேயே மாமல்லபுரம் முதலிடம் பிடித்துள்ளது”என்றார். தமிழ்நாட்டின் பாரம்பரியம் மிக்க கோயில்கள், ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைபகுதிகள் ஆகியவறறைக்காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றார்கள். தமிழ்நாட்டின் சுற்றுலாத்தலங்களின் சிறப்புகளை உலக மக்களிடம் கொண்டு செல்லும் கவன ஈர்ப்பு நிகழ்ச்சியாக தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை சார்பில் பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா நடைபெற்று வருகின்றது.

வெளிநாடுகளில் மட்டுமே நடைபெறும் இந்த பலூன் திருவிழா, இம்முறை தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்று வருகின்றது. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், நெதர்லாந்து, கனடா, பெல்ஜியம், ஸ்பெயின், வியட்நாம், பிரான்ஸ், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து மிகப்பெரிய வெப்பக்காற்று பலூன்கள் கொண்டு வரப்பட்டு இங்கே பறக்க விடப்பட்டுள்ளன.  இந்த பலூன் திருவிழாவை காண கேரளா, கர்நாடகம், ஆந்திரா மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானவர்கள் வருகை தந்துள்ளார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.

இளைய தலைமுறையினரை கவரும் நோக்கில், சாகச சுற்றுலாத்தலங்களை உருவாக்க முதல்வர் உத்தரவிட்டதையடுத்து, ஊட்டியில் 7.31 ஏக்கர் பரப்பளவில் ரூ.3.20 கோடியிலும், கொல்லிமலையில் 12.23 ஏக்கர் பரப்பளவில் ரூ.2.22 கோடியிலும், ஜவ்வாது மலையில் 10 ஏக்கர் பரப்பளவில் ரூ.2.91 கோடியிலும், ஏலகிரி மலையில் 7 ஏக்கர் பரப்பளவில் ரூ.2.98 கோடியிலும், கொடைக்கானல் மலை மன்னவனூரில் 7 ஏக்கர் பரப்பளவில் ரூ.1.75 கோடியிலும், ராமநாதபுரம் மாவட்டம், பிரப்பன் வலசை கடற்கரையில் 6.72 ஏக்கர் பரப்பளவில் ரூ.1.50 கோடியிலும் சாகச சுற்றுலா மையங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. முதல்வர் மேற்கொண்டு வரும் சுற்றுலா மேம்பாட்டு பணிகளால் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்புகளும், வணிகர்களுக்கு தொழில் வாய்ப்புகளும் பெருகும் நிலை உருவாகியுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.