மாஸ்கோ,மார்ச் 2- உக்ரைனில் ரஷ்யா ராணுவ நடவடிக்கை மேற்கொண்டுள் ளது. இதற்கிடையில் இருநாடுகளுக்கு இடையிலும் அமைதிப்பேச்சுவார்த்தை துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தாக்குதல் நடக்கும் பகுதிகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாகச் செல்வதற்கான பாதுகாப்பான மனிதாபிமான பாதை உருவாக்கப்பட்டு வருகிறது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைனை விட்டு வெளியேறும் இந்திய மாணவர்கள் மக்கள் மீது உக்ரைன் போலீஸ், ராணுவம் தாக்குவதாக இந்திய மாணவ, மாணவிகள் அச்சத்துடன் தெரிவித்தனர். மார்ச் 1 அன்று கார்கிவ் நகரில் குண்டுவீச்சில் இந்திய மாணவர் நவீன் பலியானார். இந்த நிலையில், இந்திய மாணவர் நவீன் மரணம் விசாரிக்கப்படும் என்று இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ரஷ்ய தரப்பில் உக்ரைனில் உள்ள கார்கிவ், சுமி மற்றும் பிற தாக்குதல் நடக்கும் மண்டலங்களில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை ரஷ்யப் பகுதிக்கு பாதுகாப்பாகச் செல்வதற்கான மனிதாபிமான பாதையை உருவாக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்தியர்களின் பாதுகாப்பு பிரச்சனையில் ரஷ்யா இந்தியாவுடன் தொடர்பில் உள்ளது. பாதுகாப்பான பாதை கூடிய விரைவில் நடைமுறைக்கு வரும் என்று உறுதியளித்தார்.