சென்னை, ஆக. 9 - தொழிலாளர் விரோத, மக்கள்விரோத, ஜனநாயக விரோத ஒன்றிய பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பிலிருந்து வெளியேற வலியுறுத்தி புதனன்று (ஆக.9) சென்னையில் மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் பெருந்திரள் அமர்வு நடைபெற்றது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்பை திரும்பப் பெற வேண்டும், நிரந்தர வேலையில் பணிபுரியும் நிரந்தரமற்ற தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தி சமவேலைக்கு சம ஊதியம் வழங்கும் சட்டத்தை அமல்படுத்த வேண்டும், தற்காலிகமாக மட்டும் தொழிலாளர்கள் நியமிப்பதை கைவிட வேண்டும், குறைந்தபட்ச மாத ஊதியமாக 26 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், ஓய்வூதியம் குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்; பொதுத்துறைகளை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது, வேளாண் விளை பொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய சட்டம் இயற்ற வேண்டும், சுங்கச்சாவடி கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி கொள்ளையைக் கைவிட வேண்டும்; பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு மீதான கலால் வரியை நீக்க வேண்டும், அநியாய அபராதம் விதிக்கும் மோட்டார் வாகனச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்; கல்வி, மருத்துவம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் அனைவருக்கும் சமமாக வழங்க வேண்டும், எதிர்கால சந்ததியினருக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக 3 ஆயிரம் ரூபாய் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்களை மேலும் விரிவுபடுத்த வேண்டும் ஆகிய 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இந்திய விடுதலைப் போராட்டத்தின் திருப்பு முனையாக அமைந்த வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கிய நாளில் (ஆக.9) நாடு முழுவதும் மாநிலத் தலைநகரங்களில் மத்திய தொழிற்சங்கங்கள், மாநில அளவில் செயல்படும் சங்கங்கள், மத்திய, மாநில, பொதுத்துறை ஊழியர் சம்மேளனங்கள் இணைந்து இந்தப் போராட்டத்தை நடத்தின. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே சிஐடியு, ஏஐடியுசி, தொமுச, எச்எம்எஸ், ஐஎன்டியுசி, ஏஐசிசிடியு, ஏஐயுடியுசி மத்திய தொழிற்சங்கங்கள், டபில்யுடியுசி, எம்எல்எப், எல்டியுசி, எல்எல்எப், டியுசிசி சங்கங்கள், வங்கி, இன்சூரன்ஸ், தொலைத்தொடர்பு, பாதுகாப்புத் துறை, அரசு ஊழியர் சம்மேளனங்கள் சார்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. இவ்வியக்கத்தில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்று, ஒன்றிய பாஜக அரசே ஜனநாயகத்தை அழிக்காதே, தொழிலாளர்களைச் சுரண்டாதே, அன்று வெள்ளையனே வெளியேறு, இன்று கொள்ளையனே (மோடியே) வெளியேறு, நாடாளுமன்ற தேர்தலில் மோடியை அகற்றுவோம் என முழக்கமிட்டனர். இப்போராட்டத்தில் சிஐடியு அகில இந்தியத் தலைவர் டாக்டர் கே. ஹேமலதா, மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், தொமுச பொருளாளர் கி.நடராஜன், உழைக்கும் மக்கள் மாமன்றத்தின் தலைவர் குசேலர், ஏஐடியுசி பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், எச்எம்எஸ் தலைவர்கள் மு.சுப்பிரமணியன், மா.சுப்பிரமணியபிள்ளை, ஐஎன்டியுசி பொதுச்செயலாளர் சேவியர் உள்ளிட்டு பல்வேறு தொழிற்சங்கங்களின் தலைவர்கள் பேசினர். சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத் தலைவர்கள் பங்கேற்றனர்.
மோடி அரசை அதிகாரத்தில் இருந்து அகற்றுவோம்!
சிஐடியு அகில இந்திய தலைவர் ஹேமலதா பேச்சு
“நாடு முழுவதும் பாஜகவின் பிஎம்எஸ் சங்கத்தை தவிர அனைத்து மத்திய தொழிற்சங்கங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இந்த பெருந்திரள் இயக்கத்தில் பங்கேற்றுள்ளனர். பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தொழிலாளர்களுக்கு எதிரான, நாட்டு நலன்களுக்கு எதிரான கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. இது மட்டு மல்ல போராட்டத்தின் வலிமையை குறைக்க தொழிலாளர்களின் ஒற்றுமையை சிதைக்க முயற்சித்து வருகிறது. ஒன்றிய அரசை எதிர்த்த இந்த போராட்டம் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது. இன்று தொடங்கியுள்ள இந்தப் போராட்டம் அடுத்தாண்டு மக்களவைத் தேர்தலில் மோடி அரசை அதிகாரத்தில் இருந்து அகற்றும் வரை தொடரும். இந்த கால கட்டத்தில் மோடி அரசின் தொழிலாளர் விரோதமான ஆபத்தான கொள்கைகள் குறித்து இந்திய உழைப்பாளி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். நமது கோரிக்கைகளை வெல்லவேண்டும் என்றால் தொழிற்சங்க ஒற்றுமை மிகமிக அவ சியம். ஒப்பந்த முறையாக இருந்தாலும் தொழி லாளர்களுக்கு எதிரான சட்ட தொகுப்புகளாக இருந்தாலும் புதிய ஒய்வூதிய திட்டமாக இருந்தா லும், இவை அனைத்தும் ஒன்றிய அரசு கடைப்பிடிக்கக்கூடிய நவீன தாராளமய பொரு ளாதார கொள்கைகளில் இருந்துஉருவானவை.
ஆக.24 தில்லி கருத்தரங்கம்
ஆகஸ்ட் 24 அன்று புதுதில்லி தல்கடோரா ஸ்டேடியத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் விவசாயிகள் அமைப்புகள் இணைந்து அகில இந்திய கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்துள்ளன. சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் அமைப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்த அமைப்பும் இதில் கலந்துகொள்கிறது. தொழிற் சங்கங்கள் போராட்டம் நடத்தும் போது விவசாயி கள் சங்கங்கள் ஆதரவு அளிக்கும். விவசாயிகள் சங்கங்கள் போராட்டம் நடத்தும் போது தொழிற்சங்கங்கள் ஆதரவு அளிக்கும். இனி மோடி அரசின் நாசகரமான பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து தொழிற்சங்கங்களும் விவசாயிகள் சங்கங்களும் இணைந்து போராட முடிவெடுக்க உள்ளன. இதுகுறித்து தில்லி கருத்தரங்கில் முக்கியமான தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. எனவே 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக அரசை வீழ்த்த தமிழகத்தில் உள்ள அனைத்து தொழிற்சங்கங் களும் விவசாயிகள் சங்கங்களும் இணைந்து போராட முன்வர வேண்டும்.