சுற்றுச்சூழலுக்கு உலை வைக்கும் எரிஉலை திட்டத்தை கைவிடுக!
சிபிஎம் கவுன்சிலர் பி.விமலா வலியுறுத்தல்; அரசின் பரிசீலனைக்கு பிறகு முடிவு: துணைமேயர்
சென்னை, மே 28 - கொடுங்கையூர் எரிஉலை திட்டத்தை கைவிட வேண்டுமென்று மாநகராட்சி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பா.விமலா வலியுறுத்தினார். பெருநகர சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் புதனன்று (மே 28) ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நேரமில்லா நேரத்தில் உறுப்பினர் பா.விமலா பேசியதாவது: பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் குறளகம் கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற வருகிறது. இதற்கான நிதியின் ஒருபகுதியை தேசிய பங்குச்சந்தை மூலம் திரட்டப்பட உள்ளது. இதற்கான ஒப்புதலை மன்றத்தில் பெறப்படவில்லை. இந்த நடவடிக்கையால் மக்கள் பாதிக்கப்படக் கூடாது. சென்னை நகரில் உள்ள கால்வாய்களை பராமரித்து, தூர்வாரும் பணிகளை மாநகராட்சி செய்கிறது. இதைபற்றியெல்லாம் பொதுப்பணித்துறை கவனம் செலுத்துவதில்லை. மாறாக, குடியிருப்புகளை அகற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. துறை அதிகாரிகள் முறையாக பதிலளிப்பதில்லை. எனவே, துறையின் பணிகளை முறைப்படுத்த வேண்டும். துணைமேயர் மகேஷ்குமார்: துணை முதலமைச்சர் தலைமையில் மே 27 அன்று ஒரு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. பொதுப்பணித்துறை பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார். மழைக்காலத்திற்குள் அனைத்து கால்வாய்களையும் தூர்வார அறிவுறுத்தினார். மாதந்தோறும் துணை முதல்வரே ஆய்வுக்கூட்டத்தை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். பா.விமலா: கால்வாய்களில் உள்ள ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டுமென்று ஜனவரி முதல் வலியுறுத்தி வருகிறோம். 5 மாதங்களாகியும் பணிகள் நடைபெறவில்லை. துணைமேயர்: திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு கிடைத்து, ஒப்பந்தத்தை இறுதி செய்த பிறகு பணிகள் தொடங்கும். உறுப்பினரின் கருத்தை மே 27 நடந்த ஆய்வு கூட்டத்திலும் எடுத்துக் கூறினேன். பா.விமலா: ஆம்பிபயர் எந்திரத்தை வருடாவருடம் கேட்கிறோம். கூடுதலாக கொள்முதல் செய்து தர வேண்டும். 4வது மண்டலத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 178வது வட்டம் தர்மாம்பாள் சாலையில் 3 கடைகள்தான் பிரச்சனைக்குரியவை. இந்த நிலையில் அங்கிருந்த 25 கடைகளை மாநகராட்சி முன்னறிவிப்பின்றி அகற்றி உள்ளது. பொருட்களை எடுத்துச் சென்று சுடுகாட்டில் கொட்டி வைத்துள்னர். கடைகள் அகற்றப்பட்டதால், அந்தச்சாலையையொட்டி உள்ள கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் உள்ளவர்கள் உணவு, திண்பண்டங்கள் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். மாநகராட்சி உதவிப்பொறியாளர் மீது வியாபாரிகள் லஞ்சப் புகார் கூறியுள்ளதை விசாரித்து நடவடிக்கை வேண்டும். அதேஇடத்தில் மீண்டும் கடைகளை வைக்க அனுமதிக்க வேண்டும். இதேபோன்று புகார்கள் பல இடங்களில் வருவதை சரி செய்ய வேண்டும். 4வது மண்டலம், வார்டு 35ல் டாடா ஏஸ் தனியார் வாகனம் மூலம் குப்பை அள்ளப்படுகிறது. மண்டலம் முழுமையும் தனியார் வாகனம் மூலம் குப்பை அள்ளப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றாமல் எவ்வாறு இது அனுமதிக்கப்படுகிறது? துணைமேயர்: அதுபோன்று எந்தவிதமான நடைமுறையும் இல்லை. யூகத்தின் அடிப்படையில் பேசுகிறார்? பா.விமலா: மண்டலம் 4ல் டாடா ஏஸ் வாகனம் குப்பை அள்ளவில்லையா? துணைமேயர்: குப்பை அள்ள சில நேரங்களில் அவசர அவசியம் கருதி தனியார் வாகனங்களை பயன்படுத்துகிறோம். அதிகாரப்பூர்வமாக இயக்கப்படவில்லை. தவறான தகவல்களை கூற வேண்டாம். பா.விமலா: ஆதாரம் இல்லாமல் பேசவில்லை. ஆணையர் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும். தனியார் வாகனம் எடுத்து இயக்கப்படுகிறதா? இல்லையா? தனியார் ஓட்டுநரை வைத்து வாகனம் இயக்கப்படுகிறதா? இல்லையா? 20 அடி சாலையில் அந்த வாகனம் செல்லுமா? ஆணையர்: மண்டலம் 8ல் பிஓவி வாகனங்களுக்கு மாற்றாக டாடா ஏஸ் வாகனம் மூலம் பரிச்சார்த்த முறையில் பரிசோதிக்கப்படுகிறது. பிஓவி, டாடா ஏஸ் என எது சரியாக இருக்குமோ அதனை முடிவு செய்து, மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி செயல்படுத்தப்படும். பா.விமலா: கொடுங்கையூர் குப்பை கிடங்கில் எரி உலை திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மே 5 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் தர்ணா நடைபெற்றது. வடசென்னை மாவட்ட குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மே 25 அன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. மக்களின் மாபெரும் எதிர்ப்பை மீறி ஏன் மாநகராட்சி இந்த திட்டத்தை செயல்படுத்த முற்படுத்துகிறது? அண்ணாபிள்ளை தெரு (மண்டலம் 5), சேத்துப்பட்டு (மண்டலம 8), நந்தம்பாக்கம் (மண்டலம் 12), கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகம் (மண்டலம் 4), பெருங்குடி குப்பை கொட்டும் வளாகம் (மணடலம் 14) ஆகிய இடங்களில் மரம் மற்றும் இளநீர் குடுவை கழிவுகளை பதப்படுத்தும் ஷெட் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அண்ணாபிள்ளை தெரு, சேத்துப்பட்டு, நந்தம்பாக்கம் ஆகிய 3 இடங்களில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததும் அங்கு கைவிடப்பட்டுள்ளது. அப்படியிருக்க, எரிஉலை திட்டத்தில் நாளொன்றுக்கு 2100 டன் தினசரி எரிக்கப்பட்டால் எவ்வளவு பாதிப்பு ஏற்படும். மக்கள் வாழ்வதா? இல்லையா? அனைத்து மக்களின் உடல்நலனையும் பாதுகாக்க வேண்டும். வடசென்னை, தென்சென்னை, மத்தியசென்னை ஏதாவது பாகுபாடு உள்ளதா? துணைமேயர்: மக்கள் நலனில் அரசுக்கும் அக்கறை உண்டு. உறுப்பினரின் கருத்துக்களை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம். அதை அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும். பா.விமலா: எரி உலை திட்டத்தை கைவிட வேண்டும். இங்கிருந்து அகற்றி வேறு எந்த பகுதிக்கும் கொண்டு செல்லக்கூடாது. எல்லா இடத்திலும் மக்கள் உள்ளார்கள். அவர்களின் நலன் முக்கியம். எனவே, இந்த திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும். இவ்வாறு அந்த விவாதம் நடைபெற்றது.