திண்டுக்கல், ஜன.1- புற்றுநோயாளிகளுக்காக முடி வளர்த்து தானம் செய்து வருகிறார் திண்டுக்கல் மாவட்ட இளைஞர் . இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட பொருளாளர் சேது சிவன் தான் இத்தகைய சேவையை செய்து வருகிறார். வாலிபர் சங்கத்தின் ரத்ததான கழகம் மூலம் உயிருக்கு போராடுகிறவர்களுக்கு, ஆபத்தில் உள்ளவர்களுக்கு தேவையான மிகவும் அரிதான குரூப் ரத்தம் வழங்கப்படுகிறது. இதே போல் கண் தானம், உடல் தானம், உடல் உறுப்பு தானம் என்று வாலிபர் சங்கம் தொடர்ந்து செய்து வருகிறது. இந்நிலையில் புற்று நோயாளிகளுக்காக தலைமுடியை வளர்த்து தானம் செய்யும் சேவையையும் செய்து வருகிறது. கோயமுத்தூரில் உள்ள கேர் டொனேசன் எனப்படுகிற தன்னார்வ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் மூலம், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைமுடி தானம் வழங்கப்படுகிறது. பொதுவாக புற்றுநோய் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு தலைமுடி கொட்டிவிடும். அப்படிப்பட்ட புற்று நோயாளிகள் மன ரீதியாக பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக இன்றைய இளைஞர்கள் அந்த நோயாளிகளுக்கு தங்களது முடியை தானமாக கொடுத்து உதவுகிறார்கள். இதுவரை 60 பேருக்கு மேல் தானம் செய்துள்ளனர். திண்டுக்கல்லில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளரான சேதுசிவனும் இதேபோல் கடந்த 6 மாதமாக முடி வளர்த்து தானம் செய்து வருகிறார். சமூகத்தில் நலிவடைந்தோருக்கு முடி தானம் செய்யும் சேதுசிவன் போன்ற இளைஞர்களின் சேவை தொடரட்டும்.