திருச்சி மாவட்டம் பொதுவுடமை இயக்கத்திற்கு தந்த ஆளுமைகள் ஏராளம். தோழர்கள் ஆர்.உமாநாத், பி.ராமச்சந்திரன், பாப்பா உமாநாத், கே.அனந்தநம்பியார், எம்.கல்யாணசுந்தரம் என அந்த பட்டியல் நீளும். அந்த பட்டியலில் வைத்து மெச்சத்தக்க ஓர் ஆளுமையாக விளங்கியவர் அன்புத் தோழர் கே.வரதராசன். நெல்லையிலே அரசு ஊழியராக தனது பணியைத் துவங்கி பாலவிநாயகம் போன்ற தோழர்கள் அறிமுகத்தால் கட்சியின் பால் ஈர்க்கப்பட்டு முழுநேரப் புரட்சியாளரானார். ஒன்றுபட்ட திருச்சி மாவட்டத்தில் அவர் இயக்கப் பணியாற்றி, பின்னர் பல பொறுப்புகளில் அவர் செயலாற்றி, மாவட்ட செயலாளராக, மாநில செயற்குழு உறுப்பினராக, அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக என பலத்தளங்களில் அவர் செயல்பட்டார்.
ஆரம்பம் முதல் கிராமப்புற இயக்கத்தை கட்டுவதிலேயே அவர் முன்னுரிமை அளித்தவர். விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளராக பொறுப்பேற்று ராஜஸ்தானில் நடைபெற்ற பிரம்மாண்டமான விவசாயப் போராட்டம் உட்பட ஏராளமான இயக்கங்களுக்கு வழிகாட்டியவர். திருச்சி மாவட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளராக அவர் பணியாற்றிய காலம்தான் மாவட்டத்தில் இயக்கம் பரவலாக விரிவடைந்தது. கட்சி மற்றும் வெகுஜன அரங்க விரிவாக்கத்திற்கு தோழர் கே.வரதராசன் திட்டமிட்டு முயற்சித்தார். கம்யூனிஸ்ட் இயக்கம் மேலிருந்து கட்டுவது என்பதே சாத்தியம்; அதை புரிந்து இயக்கம் இல்லாத பகுதிகளில் பொறுத்தமான தோழர்களுக்கு பொருப்பு கொடுத்து இயக்க விரிவாக்கத்திற்கு திட்டமிட்டவர். அந்த பகுதியில் பிரத்யேகமான பிரச்சனைகளை ஆய்வு செய்து வெகுஜன போராட்டங்கள் மூலம் கட்சியை வளர்த்தெடுக்குமாறு ஆலோசனைகள் வழங்குவார். தேர்தல் பணியாக இருந்தாலும் அதில் அடைந்த உடனடி வெற்றி, தோல்விகள் மட்டுமல்ல; அந்த தேர்தல் கால தொடர்புகளை அமைப்பாக்கி கட்சி விரிவாக்கத்திற்கு முயற்சிப்பதுதான் உண்மையான கம்யூனிஸ்ட் தேர்தல் பணி என எடுத்துச்சொல்வார். அப்படி தேர்தல் போராட்டத்தில் கிடைத்த தொடர்புகளை பயன்படுத்தித்தான் 1980களில் லால்குடி, திருமானூர் பகுதிகளில் கிராமப்புறங்களில் கூலி போராட்டங்கள் திட்டமிடப்பட்டன. அந்த வட்டாரமே அக்காலத்தில் கூலி போராட்டங்களின் குவிமையமாக மாறியது. அன்றைக்கு வெளிவந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் ‘கிராமப்புறங்களில் கம்யூனிஸ்ட்டுகள் ஊடுருவல்; பரவலாகி வரும் வர்க்க போராட்டங்கள்’ என்ற கட்டுரைகள் வெளிவந்தது. அதையொட்டி ஏராளமான வழக்குகளும், தாக்குதல்களும் நடந்தன.
திருச்சி மாவட்டத்தில் உள்ள பச்சைமலையில் விவசாயிகள் சங்கம் ஆய்வு நடத்தி அவர்கள் கோரிக்கைகளுக்கான இயக்கங்கள் நடத்தினார். உப்பிலியாபுரம் சட்டமன்ற தொகுதியில் முறைகேடான இடஒதுக்கீடு சான்றிதழ்களை வைத்து, ‘மலைவாழ் சாதியினர்’ என உயர்சாதியினர் சான்றிதழ் பெற்று தேர்தலில் போட்டியிட்டதை கண்டித்தும், வனத்துறையினர் மலைவாழ் விவசாயிகள்மீது நடத்தும் அடக்குமுறைகளை கண்டித்தும், ஆயிரக்கணக்கான மலைவாழ் மக்கள் பங்கேற்ற பேரணி, இயக்கங்களும் நடந்தன. கம்யூனிஸ்ட் கட்சி விரிவாக்கம் என்பது தொடர்ச்சியாக கவனம் செலுத்திட வேண்டிய முன்னுரிமைபணி என்பதை தனது அன்றாட செயலாகக் கொண்டவர் தோழர் கே.வரதராசன்.
கட்சியின் கொல்கத்தா பிளீனம் வெகுமக்களுடனான உயிர்ப்புமிகக் தொடர்பின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. கட்சித்தலைவர்கள் மக்களுடன் நெருக்கமான தொடர்புடன் இருப்பதையும், அவர்களின் பிரச்சனைகளையும், உணர்வுகளையும் உள்வாங்கி வழிகாட்டுவது என பிளினீம் வழிகாட்டியது. இந்த நடைமுறையை தனது கட்சி வாழ்க்கையில் சிறப்பாக அமலாக்கியவர் தோழர் கே.வரதராசன் அவர் மாவட்ட செயலாளராக இருந்தபோது இடைக்குழுவில் 2,3 நாட்கள் கிராமப்புறங்களில் தங்கி பணியாற்றுவார். கட்சி குடும்பங்களுடனும் மக்களுடனும் கலந்து பழகுவார். தண்ணீரில் மீனைப்போல மக்களுடன் கலந்து வாழ்ந்த கம்யூனிஸ்ட்டாவார். பல போராட்டங்களுக்கு வியூகம் வகுப்பதும், களத்தில் தோழர்களோடு பங்கேற்பதும், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வரை தொடர்ந்து களத்தில் நின்று அவர் சிறப்பாக பங்கேற்பார். அவர் எந்நிலையிலும் தன்னை முன்னிலைப்படுத்தாமல் இயக்கத்தை முன்னிலைப்படுத்துவார். திருச்சியில் தொழிற்சங்கங்கள் நடத்திய போராட்டங்கள் குறிப்பாக சிம்கோ, கரூர் மில்ஸ் போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களில் அவராற்றிய பங்கு குறிப்பிடத்தக்கது.
நகைச்சுவை உணர்வுடன் பேசுவார். மேடையில் பேசி தன்னை சுற்றி இருப்பவர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் தம் கருத்தை சொல்வார். கலை, இலக்கியம், கலைக்குழுக்களுக்கு வழிகாட்டுவது என கலை உணர்வுடன் செயல்பட்டார். அவரிடம் சர்வதேச பிரச்சனைகள் முதல் குடும்ப பிரச்சனைகள் வரை எது குறித்தும் பேசினாலும் கவனமாக கேட்டு பொருத்தமான ஆலோசனைகளை கூறுவார். ஊழியர்களை உருவாக்குவதில், பொறுத்தமான பணிகளை அளித்து வழிகாட்டுவதில், அவர்களை தகுதியான பொருப்புக்கு உயர்த்துவதில், பிரச்சனை என வருபவர்களுக்கு பொருத்தமான வழிகாட்டுதல் கொடுத்து அவர்களை பாதுகாப்பதில் அவரது பங்கு மிகச்சிறப்பானது. ஊழியர்கள் என்பவர்கள் கட்சியின் சொத்து; அவர்களை வளர்த்தெடுப்பதும், வழிகாட்டுவதும், அவர்களை இழக்காமல் பாதுகாப்பதும் என்பதில் அவருடைய அக்கறை நம் அனைவரும் பின்பற்றத்தக்கது. இந்திய தத்துவ தரிசனம் என அவர் எழுதிய நூல் தத்துவம் குறித்து ஆரம்ப நிலையில் உள்ள தோழர்களுக்கு ஒருகையேடு போல விளங்கும். அவரது வழிகாட்டுதலில் தான் இளைஞர் முழக்கம் எனும் இதழ் இளைஞர்களுக்காக திருச்சி மாவட்டத்தில் ஆரம்பத்தில் துவங்கப்பட்டது. இன்று அது வாலிபர் சங்கத்தின் மாநிலக்குழு வெளியிடும் இதழாக மாறியுள்ளது.
பேச்சாளர். எழுத்தாளர், கிளர்ச்சியாளர், ஆலோசகர், களப்பணியாளர் தலைவர்களை உருவாக்கும் தலைவர் என பன்முகத்தன்மை வாய்ந்த ஆளுமையாக விளங்கிய தோழர் கே.வரதராசன் அவர்களது வாழ்க்கை இன்றைய கம்யூனிஸ்ட்களுக்கு மிகச்சிறந்த பாடமாக விளங்கும். தோழர் கே.வரதராசன் காட்டிய வழியில் அவரைப்போல அர்ப்பணிப்புடனும், இயக்கப் பணிகளில் செயலாக்கத்துடன் செயல்படுவதன் மூலம் கம்யூனிஸ்ட் கட்சியை பலப்படுத்துவோம், மக்களுடன் நெருக்கமாக பயின்று வெகுஜன போராட்டங்களை வளர்த்தெடுப்போம்.
இன்று (மே 16) தோழர் கே.வரதராசன் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்