தீண்டாமைக்கும் பாகுபாட்டுக்கும் எதிரான போராட்டத்துடன் கேரளத்த வர்க்கு புதிய சுவை அனுபவ வரலாறும் தொடங்கியது. வைக்கம் போராட்டத்தின் ஒரு பகுதியாக சப்பாத்தி முதன்முறையாக கேரளாவுக்கு வந்தது. வைக்கம் சத்தியாகிரகத்திற்காக, சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டியின் அறிவுறுத்தலின்படி பஞ்சாபிலிருந்து வந்த அகாலிகள் மூலம் போராட்டக்காரர்களுக்கு சப்பாத்தி வழங்கப்பட்டது. லால் சிங் தலைமை யில் அமிர்தசரஸில் இருந்து வந்தவர்கள் வைக்கத்தில் இலவச (போஜன சாலை) உணவகம் தொடங்கினர். கொச்சியின் பழைய துறைமுகத்தில் கராச்சியிலிருந்து இறக்கப்பட்ட கோதுமை அகாலிகளால் அரைக்கப்பட்டு வைக்கத்துக்கு கொண்டு வரப்பட்டது. சப்பாத்தியும் பருப்பு குழம்பும் சத்தியாக்கிரகிகளுக்கும் அவர்க ளை பார்க்க வந்தவர்களுக்கும் பரிமாறப்பட்டது. போராட்டம் குறித்து சர்தார் கே.எம்.பணிக்கர் மூலம் கேள்விப்பட்ட பாட்டியாலா மன்னரின் ஆதரவும் இதற்கு கிடைத்தது. வைக்கம் சத்தியாகிரகம் இந்துக்களாக உள்ள உயர்ந்த- தாழ்ந்த பிரிவினர் இடையேயான விவகாரம்; அதை அவர்களே தீர்த்துக் கொண்டால் போதும் என்ற காந்திஜியின் நிலைப்பாட்டைத் தொடர்ந்து, அகாலிகளால் 1924 ஏப்ரல் 29 முதல் ஜூன் 25 வரை மட்டுமே உணவகம் நடத்த முடிந்தது. இந்த குறுகிய காலத்தில் ரூ.4,000 செலவு செய்து 30,000 பேருக்கு உணவு தயாரித்து அகாலிகள் வழங்கினர். அதன்பிறகு இரண்டாம் உலகப் போரின் போது, பாரத் டூரிஸ்ட் ஹோம் ஹோட்டல் நிறுவனர் கோவிந்த ராவ், கொச்சி மார்க்கெட் அருகே ஒரு உணவகத்தில் சப்பாத்தியும் பருப்பும் வழங்கினார். கொச்சியில் முகாமிட்டிருந்த வட இந்திய ராணுவ வீரர்களுக்காக தயாரிக்கப்பட்ட சப்பாத்தி மலையாளிகளுக்கும் விருப்ப உணவானது. தீண்டாமையை அகற்றும் போராட்டத்தின் போது வந்த சப்பாத்தி மீண்டும் வந்தபோது அதை கேரள மக்கள் வாழ்த்தி வரவேற்றனர்.