கொழும்பு, மே 9- இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். தவறான நிர்வாகத்தினால் இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி உள்ள ராஜபக்சே சகோதரர்களான பிரதமர் மகிந்த ராஜபக்சே, ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே ஆகியோரை பதவியில் இருந்து விலகும்படி வலியுறுத்தி மக்கள் 33வது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல தரப்பிலும் நெருக்கடி முற்றிய நிலையில், ஜனாதிபதி மாளிகையில் சனிக்கிழமை சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில், ‘இடைக்கால அரசு அமைவதால் நாட்டின் நெருக்கடி நிலைக்கு தீர்வு காணப்படும் என்றால் தான் பதவி விலக தயார்,’ என்று பிரதமர் மகிந்த ராஜபக்சே கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதனால், ராஜபக்சே விரைவில் பதவி விலகுவார் எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே கொழும்பு மற்றும் தெற்கு மாகாணங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் இலங்கை முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே, இலங்கை அரசுக்கு எதிராக ஒரு மாதத்துக்கு மேல் நடந்து வரும் போராட்டத்துக்கு பணிந்து பதவி விலகினார். பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியும் தனது இளைய சகோதரருமான கோத்தபயவிடம் மகிந்த ராஜபக்சே வழங்கியுள்ளார். 2019ம் ஆண்டு முதல் இலங்கை பிரதமராக இருந்து வந்த நிலையில் தற்போது ராஜினாமா செய்துள்ளார். கொழும்புவில் பதற்றம் மகிந்த ராஜபக்சே பதவி விலகலைத் தொடர்ந்து இலங்கை அமைச்சரவை கலைக்கப்பட்டது. ராஜபக்சே ஆதரவாளர்கள், இலங்கை அரசு எதிர்ப்பாளர்கள் இடையே வெடித்த மோதலால் கொழும்பில் பதற்றம் அதிகரித்துள்ளது. ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவரை சுட்டுக்கொன்றுவிட்டு, தானும் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே இலங்கையில் இடைக்கால அரசு அமைப்பது பற்றி அடுத்தகட்ட ஆலோசனை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இன்று அல்லது நாளை இடைக்கால அரசு அமைப்பது பற்றி முடிவு எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.