திருப்பூர் - வாழ்வின் சராசரித் தேவைகளின் போராட்டமே மலைக்கச் செய்து விடும். இதைத் தாண்டி உயிரோடு வாழவே போராடுகிறவர்கள் நம்மில் பலருண்டு. கொடூர நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இறப்பை நெருங்கி, அச்சத்தில் உயிர்ப் போராட்டம் நடத்துவார்கள். அப்படியொரு மரணம் தரும் மூளைக் காச நோயால் பாதிக்கப்பட்டும், சிறிதும் அஞ்சாமல் போராடி, தன் வாழ்வை மீட்டு ‘எண்ணம் செயலாகும்’ எனும் மார்க்சிய அறிவியலுக்கு சாட்சியாகி வருகிறார் திருப்பூரைச் சேர்ந்த இளம் பெண் இருதயலட்சுமி. நோய் தாக்கியவருக்கு இறப்பையே ஏற்படுத்தும் மூளைக் காச நோயிலிருந்து உயிரோடு மீண்டாலும், வாதத்தில் விழுந்த கை கால் இயக்கம் மற்றும் பேச்சுத்திறன்களை இருதயலட்சுமி போல மீண்டும் மீட்டுக் கொள்வதெல்லாம் மன உறுதியின் ஆச்சரியங்களே. சிறுவயதில் சதுரங்கம், பேச்சு மற்றும் நடனப் போட்டிகளில் பரிசுகள் வாங்கியும் குறும்படங்களில் நடித்தும் வலம் வந்த சுட்டிப் பெண் இருதயலட்சுமிக்கு, இருபதாவது வயதில் தான் இயங்கவே முடியாத ஒரு படுக்கை உயிரா வோம் என்று யோசித்திருக்கவே வாய்ப்பில்லை.
வானியல் விஞ்ஞானி கனவோடு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த இருதயலட்சுமியை 2015ல் மூளைக் காச நோய் தாக்கியது. வெறும் கண் இமைத்தலை மட்டுமே மீதம் வைத்து விட்டு உடலின் அத்தனை இயக்கங்களையும் நிறுத்தி முழு உடல் வாத நோயாளியாக்கி படுக்கையில் தள்ளியது. ஆனால் இருதயலட்சுமியோ ‘பிரெய்ன் டிபி ஃபைட்டர்’ என்று தன்னை அறிவித்துக் கொண்டு, கண் சிமிட்டல்கள் மூலம் புதிய மொழியை உருவாக்கிப் பேசி தன் தேவைகளை உணர்த்தி, விடா முயற்சியுடன் போராடி, இன்று உதவியாளர் துணையோடு ஊன்றுகோல் வைத்து நிற்கும் அளவு முன்னேறி வியக்க வைக்கிறார். ஆரம்பத்தில் சுவாசத்திற்கு ஒன்று, மூளைக் கசிவு வெளியேற ஒன்று, உணவுக்காக ஒன்று, சிறுநீர் வெளியேற ஒன்று என உடலில் நான்கு குழாய் இணைப்புகளோடு மருத்துவமனையிலிருந்து திரும்பியவர் இன்று எந்தக் குழாயும் இன்றி வாழ்கிறார்.
குறும்படம் ஒன்றில் ஒரு ஏழைச் சிறுவனின் மூளை அறுவைச் சிகிச்சைக்காக ஊடகங்கள் மூலம் நிதி திரட்டும் யோசனையைச் சொல்லி நடித்த இருதயலட்சுமிக்கு, அதே காட்சி சொந்த வாழ்வில் நடந்து விட்டதை ஒரு துயர ஆச்சரிய மாகத் தெரிவிக்கிறார் இவரது தந்தை தாண்டவக்கோன். இவர் திருப்பூர் தமுஎகசவில் பணியாற்றிய தோழர். ஏழு வருட மருத்துவப் போராட்டத்தில் ஆரம்பக் கட்டத்தில் இருதயலட்சுமியை உயிரோடு மீட்பதிலேயே நடுத்தரக் குடும்பமான தங்களின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் கரைந்து விட்ட நிலையில், கடந்த ஆண்டுகளில் நண்பர்கள் மற்றும் தொண்டு அமைப்புக்கள் உதவியோடு மகளுக்கான சிகிச்சைகள் நின்று விடாமல் கவனித்து வருகிறார். ஆனால் கிடைக்கும் உதவிகளை விடப் பல மடங்கு அதிகம் செலவுள்ளதாக நோயின் தன்மை இருப்பதால் அவ்வப்போது சிகிச்சைகள் தடைப்பட்டு இருதயலட்சுமி பின்னடைவைச் சந்திக்கிறார். தெரிந்த நண்பர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களையே மீண்டும் மீண்டும் அணுக முடியாத நிலையில் இன்னும் தட்டாத கதவுகளைத் தட்டும் விதமாகவும் இருதய லட்சுமியின் நிலையை அறியாத இதயங்களை அணுகும் வழிகளை நாடுகிறார். தற்போது இருதய லட்சுமிக்கு மூளை மற்றும் நினைவுகள் தொடர்பான சிகிச்சைகள் ஆயுர்வேத முறையிலும், பக்கவாதம் தொடர்பான சிகிச்சைகள் ஆயுர்வேதம் மற்றும் முழு நேர இயன்முறை ரீஹேபிலிடேஷன் முறையிலும் தரப்பட்டு வருகிறது. மூளைக் காச நோயின் உப விளைவாக உயிர்வலி தரும் ‘மயோசிடிஸ்’ எனும் தசை அழற்சி பாதிப்பும் இருதய லட்சுமிக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இடுப்புப் பகுதியில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் நிலை உருவாகி உள்ளது.
இவர்களைக் காண வருகிறவர்களுக்கு, ஒரு பெண் கதறியழும் சத்தம் கேட்கும் வீடு என்று விசாரியுங்கள் என பகுதி வாசிகள் அடையாளம் சொல்லும் அளவுக்கு இருதயலட்சுமி சதா அழுது துடிக்கும் நிலைமை உள்ளது. என்ன துன்பம் நேர்ந்தாலும் நான் சரியாகி வானியல் விஞ்ஞானி ஆவேன் என்று கல்விக் கனவோடு எழுதிக் காட்டிக் காத்திருக்கிறார் இளம் பெண் இருதயலட்சுமி. ஈன்றெடுத்த பெற்றோராக காலமெல் லாம் எந்த நிலையிலும் இருதய லட்சுமியை வைத்துப் பராமரிக்க நாங்கள் தயார் தான் என்றாலும், குணமாக்கும் வாய்ப்பிருந்தும் பணமில்லை என்று ஒரு காரணத்திற்காக அவளின் மருத்துவச் சிகிச்சைகளை நிறுத்தி விட மனம் ஒப்பவில்லை. மேற்கண்ட அனைத்து சிகிச்சைகளுக்கும் 15 லட்ச ரூபாய் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. கால தாமதம் நோயாளிக்கு இதுவரை எட்டிய சாதக நிலைகளிலிருந்தும் பின்னடைவை ஏற்படுத்துவதோடு, அனுதினமும் உயிர்வலியை அனுபவிக்கும் அவலத்தையும் தரும் என்பதால் வாய்ப்புள்ள நண்பர்கள் துரிதமாக நிதி உதவுமாறு தாண்டவக்கோன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொடர்புக்கு - 9360254206
கூகுள் பே - 77082 80484
வங்கி கணக்கு -
S.Karthikeyan
Ac no: 1779166000014881
Savings account
IFSC; KVBL0001779
Avinasi Road Branch, Tirupur.